ஆவடி அருகே ரயில் முன் பாய்ந்து இரு குழந்தைகளுடன் பெண் தற்கொலை

விஜயலட்சுமி: கோப்புப்படம்
விஜயலட்சுமி: கோப்புப்படம்
Updated on
1 min read

ஆவடி அருகே தனது இரு குழந்தைகளுடன் 24 வயது இளம்பெண், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுதொடர்பாக, போலீஸார் தரப்பில் கூறியதாவது:

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்து மாரி. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (24).

முத்துமாரியும்,விஜயலட்சுமியும் 4 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் (இரண்டரை வயதில் ஒரு மகன், மூன்று மாத ஆண் குழந்தை) உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக முத்து மாரிக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி நேற்று இரவு வீட்டை விட்டு இரு குழந்தைகளுடன் வெளியே சென்றார். இந்நிலையில், இன்று (பிப்.18) காலை விஜயலட்சுமி அவரது இரு குழந்தைகளுடன், ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த இந்துக்கல்லூரி ரயில் நிலையம் அருகே ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து, தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீஸார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஆவடி ரயில்வே போலீஸார் விஜயலட்சுமியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in