Last Updated : 11 Feb, 2020 05:01 PM

 

Published : 11 Feb 2020 05:01 PM
Last Updated : 11 Feb 2020 05:01 PM

புதுச்சேரி அருகே மகனை அடித்துக் கொலை செய்த தந்தை கைது

கொலை செய்யப்பட்ட ரஞ்சித்குமார்.

புதுச்சேரி

பிரான்சிலிருந்து வந்த மகனின் கை, கால்களை கட்டிப் போட்டு தந்தையே கொலை செய்த சம்பவம் புதுச்சேரி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் குமார். இறால் மற்றும் கனவா மீன்களை வாங்கி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (40), அவருடைய மனைவி அனிதாவுடன் பிரான்ஸில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரஞ்சித்குமார், பிரான்ஸில் இருந்து வீராம்பட்டினத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். மதுப்பழக்கம் கொண்ட ரஞ்சித்குமார் கையில் பணம் இல்லாததால், தந்தை செய்யும் தொழிலில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் எனக் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அவருக்கும் அவரது தந்தை குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று (பிப்.10) இரவும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ரஞ்சித்குமார், அவரது தாயைத் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் ரஞ்சித்குமாரைத் தாக்கியுள்ளார்.

இதில், அவர் மயங்கி விழுந்த நிலையில், அவரது கை, கால்களைப் புடவையால் கட்டிய குமார் மீண்டும் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரஞ்சித்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதுகுறித்து இன்று (பிப்.11) தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று ரஞ்சித் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து இந்தக் கொலை தொடர்பாக குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வீராம்பட்டினத்தில் தந்தையே மகனைக் கொலை செய்த சம்பவம் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

வரதட்சணை கொடுமை: ஐபிஎஸ் அதிகாரி மீது காவல் ஆணையரிடம் மனைவி புகார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x