Last Updated : 05 Feb, 2020 12:11 PM

 

Published : 05 Feb 2020 12:11 PM
Last Updated : 05 Feb 2020 12:11 PM

புதுச்சேரியில் இளைஞர் வெட்டிக் கொலை: முன்விரோதம் காரணமா? - போலீஸார் விசாரணை

புதுச்சேரியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்து, அவரது உடலைத் தீயணைப்பு நிலையக் குடியிருப்பின் பின்புறம் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் ராம் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (23). இவர் மீது அடிதடி உள்ளிட்ட சில வழக்குள் உள்ளன. இந்நிலையில் நேற்று (பிப்.4) இரவு வீட்டின் அருகே ஜெயபால் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தி, அரிவாளால் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

பின்னர், அவரது உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று கோரிமேடு தீயணைப்பு நிலையத்தின் குடியிருப்புப் பின்புறம் உள்ள காலியிடத்தில் வீசிவிட்டுச் சென்றனர். இது குறித்து இன்று (பிப்.5) காலை தகவல் அறிந்த கோரிமேடு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஏப்ரல் மாதம் ஜெயபால் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து பன்னீர்செல்வம் என்பவரை வெட்டியுள்ளனர். அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தற்போது ஜெயபால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதையடுத்துக் கொலை செய்யப்பட்ட ஜெயபால் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x