Published : 07 Jan 2020 09:18 PM
Last Updated : 07 Jan 2020 09:18 PM

விருத்தாசலத்தில் பிரசவத்துக்குப் பின் இளம்பெண் மரணம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கபட்ட இளம்பெண் வயிற்றில் பஞ்சை வைத்து தைத்ததால் பலியான விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், கலர் குப்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் பிரியா. இவர் பிரசவத்திற்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடந்தது என்ன?

ராஜ்குமார் (29) என்பவரின் மனைவி பிரியா (26). 5 ஆண்டுகள் காதலித்த அவர்கள் 2018-ல் திருமணம் செய்தனர். குழந்தை உண்டான பிரியா தலைப் பிரசவத்துக்காக கடந்த டிசம்பர் 27-ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அலட்சியமாக வயிற்றின் உள்ளே பஞ்சை வைத்து தைத்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து அவருக்கு நினைவு தப்பிப்போக அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக பிரியா உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டிய உறவினர்கள், விருத்தாசலம் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பிரியா உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க கடலூர் மாவட்ட மருத்துவப் பணிகளில் இணை இயக்குனருக்கு மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x