Published : 30 Dec 2019 02:15 PM
Last Updated : 30 Dec 2019 02:15 PM

விலகிச் சென்றாலும் விடாத தொந்தரவு; நண்பரைக் கொலை செய்த துணை நடிகை: கணவர் உட்பட நான்கு பேர் கைது

தெரியாமல் நட்பு ஏற்பட்டதை அடுத்து ஒருகட்டத்தில் உணர்ந்து விலகிச் சென்ற துணை நடிகைக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த நண்பர் கொலை செய்யப்பட்டார். இதில் துணை நடிகை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொரட்டூர் சியாமத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (49). இவர் தேனாம்பேட்டையில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி தேவி (42). டெய்லராக இருந்தவர் பின்னர் சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக நடிக்கத் தொடங்கினார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேவி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தேவிக்கும் வடபழனியில் வசித்துவந்த துணை நடிகர் ரவி (38) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஜே.கே.ரித்தீஷ் நடித்து வெளியான 'நாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ரவிக்கும் தேவிக்கும் ஏற்பட்ட நட்பு நாளடைவில் கூடா நட்பாக மாறியது.

ஆறு வருடங்களாக இருவரும் தொடர்பில் இருந்து வந்த நிலையில், கணவர் சங்கர் கேட்டுக் கொண்டதை அடுத்து ரவியின் தொடர்பைக் கைவிட்டார் தேவி. கடந்த 2 ஆண்டுக்கு முன் ரவியை விட்டுப் பிரிந்த தேவி, கணவர் சங்கருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

ஆனால், ரவியால் அப்படி எளிதில் தேவியை மறக்க முடியவில்லை. தொடர்ந்து தேவியிடம் பிரச்சினை செய்து வந்துள்ளார். இதில் தேவியின் தங்கை லட்சுமியைப் பார்த்த அவர் லட்சுமிக்காகவும் பிரச்சினை செய்து வந்துள்ளார்.

அவ்வப்போது குடித்துவிட்டு வந்து தேவி மற்றும் லட்சுமியிடம் பிரச்சினை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் ரவி. தான் செய்த தவறை உணர்ந்து திருந்திய பின்னும், அது தனக்கும் அப்பாவியான சகோதரியின் குடும்பத்துக்கும் பிரச்சினையாக மாறி வருகிறதே என தேவி வருந்தி வந்தார்.

இந்நிலையில் கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகரில் உள்ள லட்சுமியின் வீட்டுக்கு நேற்றிரவு 12 மணி அளவில் சென்ற ரவி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து லட்சுமி தனது சகோதரி தேவிக்கு போன் செய்து வரவழைத்தார். கொளத்தூருக்குத் தனது கணவர் சங்கருடன் வந்த தேவி, ரகளையில் ஈடுபட்ட ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினார்.

ஆனால், மது போதையில் இருந்த ரவி மீண்டும் ரகளையில் ஈடுபட்டார். லட்சுமி மற்றும் தேவியை அவதூறாகப் பேசி வம்பிழுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவி, அவரது கணவர் சங்கர், தேவியின் சகோதரி லட்சுமி, லட்சுமியின் கணவர் சவாரியா ஆகிய நான்கு பேரும் ரவியை உருட்டுக் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்தார்.

ரவி இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நால்வரும் ராஜமங்கலம் காவல் நிலையத்துக்குச் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தனர். ராஜமங்கலம் போலீஸார் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சமபவ இடத்திற்குச் சென்று இறந்த ரவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கூடா நட்பை விட்டு விலகினாலும் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி, தங்கையின் வாழ்க்கையையும் கெடுக்க நினைத்த நபரைக் கொலை செய்ததால் துணை நடிகை மட்டுமல்லாமல் இரண்டு பேர் குடும்பமும் கொலைக் குற்றத்தில் சிக்கியது. இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x