Published : 30 Nov 2019 03:26 PM
Last Updated : 30 Nov 2019 03:26 PM

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு; பொன் மாணிக்கவேல் விடுவிப்பு: அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க அரசு உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு ஐஜி பொன்மாணிக்கவேலின் ஓராண்டு பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவரை விடுவித்து உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஓய்வுபெறும் முன் கடைசி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவில் சர்ச்சைக்குரிய அதிகாரியாகவே காலம் தள்ளியவர் பொன்மாணிக்கவேல். 1989-ம் ஆண்டு குரூப்.1 அலுவலராக காவல் பணியில் இணைந்தவர் பொன்.மாணிக்கவேல். 2010-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். ரயில்வே, சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஐஜியாக பதவி வகித்தப்பின் ஐஜியாக பதவி உயர்வுப்பெற்றார்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் சிலைகளை பிடிப்பதில் ஊடக வெளிச்சம் அதிகம் பெற்ற பொன்மாணிக்கவேல் ஒரு கட்டத்தில் அரசுக்கு தலைவலியானார். இதனால் அவரை மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் தலையிட்டு அவரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக தொடர உத்தரவிட்டது.

அவரது பதவி காலத்தில் அவரது மேலதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்புவதில்லை, விசாரணை என அழைத்து கைது செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. அறநிலையத்துறையின் உயர் அதிகாரிகளை அவர்கள் பதவிக்கான ஒரு சட்டப்பாதுகாப்பைக்கூட கவனத்தில் கொள்ளாமல் நடந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக ஓய்வு பெறும் அன்று மீண்டும் அவரை சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து தன்னிஷ்டப்படி நடக்கிறார், எந்தவழக்கையும் நடத்தவிடுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து அவருக்கு கீழ் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் வேறு துறைக்கு மாற்ற அனுமதி கேட்டு டிஜிபியிடம் மனு அளித்தனர். தனது அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

பொன் மாணிக்கவேல் தன்னிஷ்டப்படி நடக்க முடியாது, அவர் விசாரணை மட்டுமே செய்யவேண்டும், கைது நடவடிக்கைக்கு மேலதிகாரிகள் ஒப்புதல் வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் பொன் மாணிக்கவேல் பதவிகாலம் முடிவதால் அதை நீட்டிக்க உத்தரவிடவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றத்திலும் பொன் மாணிக்கவேல் குறித்த வழக்கு நடந்து வருகிறது. வரும் டிச.2 அன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழக அரசு அவரை சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளது.

உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி ஓய்வுபெறும் முன் கடைசியாக பொன் மாணிக்கவேலை சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து விடுவிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

“சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேலை கடந்த 1-12-2018 முதல் 30-11-2019 வரை தமிழக அரசு நியமித்தது. பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவடைவதை ஒட்டி, சட்டம் ஒழுங்கு டிஜிபி பரிந்துரை அடிப்படையில் அவரை விடுவித்து உத்தரவிடப்படுகிறது.

பொன் மாணிக்கவேல் தான் இதுவரை செய்த வேலைகளுக்கான ஆவணங்கள், விசாரணை அறிக்கைகள், வேறு ஆவணங்கள் இருப்பின் அனைத்தையும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங் வசம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறைச் செயலருக்காக துறை அலுவலர் கையொப்பமிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x