Published : 05 Oct 2019 08:28 PM
Last Updated : 05 Oct 2019 08:28 PM

ஓடும் ரயிலில் செல்போனை பறிக்க முயற்சி: கீழே விழுந்த அப்பாவி இளைஞர் உடல் சிதறி உயிரிழப்பு: 4 பேர் கைது

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே ஓடும் ரயிலில் கதவோரம் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டு வந்த இளைஞரின் செல்போனை பறிக்க ஒரு கும்பல் முயன்றபோது அவர் ரயிலிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார்.

ஆந்திரா குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாந்தின் நடஸ்ஸா (26). சென்னைக்கு தனது அம்மா, தம்பி மற்றும் நண்பர்கள் என்று மொத்தம் 5 நபர்களுடன் வந்த இவர் மீண்டும் ஆந்திரா செல்ல நேற்றிரவு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 8.15 மணிக்கு ஜிடி எக்ஸ்பிரஸில் பொதுப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

பெட்டியில் கும்பல் அதிகம் இருந்ததால் ஷாந்தின் நடஸ்ஸா படியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். படியில் அமர்ந்தப்படி தனது செல்போனை பார்த்தப்படி வந்துள்ளார். அப்போது ரயில் எண்ணூரை கடந்து அத்திப்பட்டு புது நகர் இரயில் நிலையத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு இடத்தில் ரயில் வேகம் சற்று குறைந்து சென்றுள்ளது. அந்த நேரம் கீழே நின்றிருந்த செல்போன் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் ஷாந்தின் நடஸ்ஸாவின் செல்போனை பறித்துள்ளார். செல்போன் பறிப்பினால் அதிர்ச்சியடைந்த ஷாந்தின் நடஸ்ஸா செல்போனை விடாமல் பிடிக்க முயன்றபோது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் ரயில் சக்கரத்தில் அவரது உடல் சிக்கி இரண்டு மூன்று துண்டாகி சம்பவ இடத்திலேயே ஷாந்தின் நடஸ்ஸா பரிதாபமாக உயிரிழந்தார். செல்போனை பறித்த நபர் இதைப்பார்த்ததும் ஓடிவிட்டார். இளைஞர் ஷாந்தின் நடஸ்ஸா கீழே விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டு ரயிலை நிறுத்தினர்.

ஷாந்தின் நடஸ்ஸாவின் தாயார், தம்பி, நண்பர்கள் அவரது உடலைப்பார்த்து கதறி அழுதனர். ரயில்வே போலீஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போனை பறித்து இளைஞர் ஷாந்தின் நடஸ்ஸாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் 16 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் எண்ணூர் தாழாகுப்பத்தைச் சேர்ந்த நாகராஜ்(22), எண்ணூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (24), மகேஷ் (18) மற்றும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது.

இவர்கள் ரயில் மெதுவாக செல்லும் இடங்களை தெரிந்துக்கொண்டு தண்டவாளம் ஓரம் நின்றுக்கொண்டு செயின், கைப்பை, செல்போன்களை பறிப்பது என இருந்துள்ளனர். இவர்கள் செல்போனை பறிக்கும் முயற்சியில் அப்பாவி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x