Last Updated : 01 Oct, 2019 05:24 PM

 

Published : 01 Oct 2019 05:24 PM
Last Updated : 01 Oct 2019 05:24 PM

தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ்: அதிகாரிகள் விசாரணை

தேனி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் இன்று(அக்.1) தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி எஸ்பி. விஜயகுமார் விசாரணை நடத்தினார்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட்தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவரும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த ராகுல், பிரவீன், அபிராமி ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அபிராமி மட்டும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். மற்ற 3 மாணவர்கள், அவர்களது தந்தையருடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் இர்பான் என்ற மாணவரும் இதே முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி.போலீஸார் இவரை கைது செய்ய முயற்சி செய்தனர். ஆனால் அவர் தலைமறைவானதால் அவரது தந்தை முகமது சபியை அழைத்துவந்து கடந்த இரண்டு நாட்களாக விசாரித்து வருகின்றனர்.

இதுவரை தலைமறைவாக இருந்த மாணவர் இர்பான் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆஜர்:

இதற்கிடையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசராஜ் இன்று தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு வந்தார். எஸ்பி. விஜயகுமார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர், மருத்துவக்கல்வி இயக்குனரக உத்தரவுப்படி கடந்த வாரம் அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தோம். இர்பான் மட்டும் பங்கேற்கவில்லை. மேலும் விடுதியை விட்டு வெளியேறிச் சென்று விட்டார். அவரது சான்றிதழ் குறித்த சந்தேகங்களை இயக்குனரக அலுவலகத் தெரிவித்துவிட்டோம் என்று கூறி அதற்கான ஆவணங்களைச் சமர்பித்தார்.

ஆள்மாறாட்ட நபர் தேர்வு எழுதியது முதல், கவுன்சிலிங், கல்லூரி சேர்க்கை என்று தொடர்ச்சியாக ஒரே புகைப்பட ஆவணத்துடன் கலந்து கொண்டதால் சந்தேகம் ஏற்படவில்லை. தற்போது இப்பிரச்சினை வெளிவந்ததால் ஆவணங்களை சரிபார்த்தபோது இந்த மாணவர் மீது சந்தேகம் உறுதிசெய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஏஜென்டுக்கு வலை..

இது குறித்து தென்மண்டல சிபிசிஐடி எஸ்.பி.விஜயகுமார் கூறுகையில், "முகமதுசபி மூலம்தான் ஏஜன்ட்கள் ரஷீத், வேதாசலம் ஆகியோர் மற்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிமுகமாகி உள்ளனர்.

எனவே இது குறித்து மும்முரமாக விசாரித்து வருகிறோம். ஏஜன்ட் பிடிபட்டால்தான் தேர்வு எழுதிய நபர் குறித்த விபரங்களை அறிய முடியும். இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் முகமதுசபியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x