

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.36 கோடி மதிப்புள்ள 940 கிராம் தங்கம், ரூ.2.73 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம்.
சென்னை: விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இளைஞர், இளம் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 28 வயது இளைஞர் வந்தார். சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவர் உள்ளாடைக்குள் ரூ.1.36 கோடி மதிப்புள்ள 940 கிராம் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தங்கக் கடத்தலுக்கு குருவியாக செயல்பட்டது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்படி, தங்கத்தை வாங்கிச் செல்வதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு வெளிப்பகுதியில் காத்திருந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.2.73 கோடி பணம்: அதேபோல், நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து துபாய் செல்ல வந்த சென்னையை சேர்ந்த 30 வயது பெண்ணிடம் இருந்து ரூ.2.73 கோடி (இந்திய ரூபாய் மதிப்பு) அமெரிக்க டாலர், யூரோ கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் கடத்தல் குருவியாக செயல்பட்டது தெரியவந்தது.