திண்டுக்கல்: டிராக்டர் மீது அரசு பேருந்து மோதி விபத்து- 3 பேர் உயிரிழப்பு, 18 பேர் காயம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் டிராக்டரில் ஊர் திரும்பிய போது, அரசு பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சேடப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த 20 பேர் ரெட்டியார்சத்திரம் அடுத்த கதிரையன்குளம் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலில் நடந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவுக்கு நேற்று (ஜூன் 21) டிராக்டரில் சென்றுள்ளனர். டிராக்டரை செல்வ குமார் (35) ஓட்டியுள்ளார். திருவிழா முடிந்து இன்று (ஜூன் 22) சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஊர் திரும்பியுள்ளனர். திண்டுக்கல் - பழநி சாலையில் வந்தபோது திருச்சியில் இருந்து பழநிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பெரியண்ணன் (33) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரில் இருந்த சஞ்சய் (21), சேனாதிபதி (24), நாகேஸ்வரன் (21)), விவேக் (28), பேருந்தில் வந்த தஞ்சாவூரை சேர்ந்த சாமிநாதன் (48) உட்பட 20 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து வந்த ரெட்டியார் சத்திரம் போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்ற 5 பேரில், அழகுமலை (18), அசோக் (24) ஆகியோர் சிகிச்சை இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in