Last Updated : 20 May, 2024 04:57 PM

 

Published : 20 May 2024 04:57 PM
Last Updated : 20 May 2024 04:57 PM

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 3.05 கிலோ தங்கம் பறிமுதல்: மூவர் கைது

சென்னை விமான நிலையம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.05 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விமான நிலைய ஒப்பந்த ஊழியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலையில் சென்னை விமான நிலைய சர்வதேச முனைய புறப்பாடு பகுதி வழியாக, விமான நிலைய உணவு விடுதி ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் மணிகண்டன் (28) என்பவர் கையில் பிளாஸ்க் ஒன்றுடன் வெளியே வருவதை பார்த்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் மணிகண்டனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது மணிகண்டன் கையில் வைத்திருந்த பிளாஸ்க்கை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.92 லட்சம் மதிப்புள்ள 1.4 கிலோ தங்க கட்டிகள் இருந்தன.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மணிகண்டனையும் தங்க கட்டிகளையும் விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர். தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், பிளாஸ்க்கை கொடுத்து, விமான நிலையத்துக்கு வெளியில் வருகை பகுதியில் நிற்கும் ஒருவரிடம் கொடுக்கச் சொன்னதாக மணிகண்டன் தெரிவித்தார். இதையடுத்து, துபாயில் இருந்து வந்த அந்த பயணி யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், துபாயில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பியபோது, சுற்றுலா விசாவில் துபாய் சென்றுவிட்டு வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி சோதனை செய்த போது, அதில் ரூ.85 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கப்பசை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் அணிந்திருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 3.05 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x