நிலத்தகராறில் சித்தப்பா மீது பெட்ரோல் ஊற்றி எரித்து வாலிபர் வெறிச்செயல் @ காவேரிப்பட்டணம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் சித்தப்பா மீது வாலிபர் பெட்ரோலை ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த சந்தாபுரம், பூமலை நகரை சேர்ந்தவர் சின்னவன் (55). சவுளூர் கூட்ரோட்டில் தீவன கடை நடத்தி வந்துள்ளார். அவரது அண்ணன் மணியின் மகன் செந்தில் (26). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 19-ம் தேதி டிராக்டரில், தன் விவசாய நிலத்தில் உள்ள நெல்லை எடுப்பதற்கு செந்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சின்னவன் குடும்பத்தினர், டிராக்டர் தங்கள் நிலத்தின் வழியாக போக கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால்ம், போலீஸார் தங்கள் குடும்பத்தினரை மட்டும் கைது செய்ய தீவிரம் காட்டுவதாக செந்தில், தன் நண்பர்களிடம் புலம்பியுள்ளார். மேலும், இதனால் தன் தாய் ராணி, தந்தை மணி, தம்பி சீனிவாசன் (24) ஆகியோர் தலைமறைவாக இருக்கும் நிலை வந்துள்ளது. அதனால் தன் சித்தப்பாவை தீர்த்து கட்டுவதை தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இன்று பிற்பகல், 3 மணியளவில் தன் சித்தப்பா சின்னவனின் தீவன கடைக்கு செந்தில் சென்றுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது செந்தில், தான் எடுத்து வந்த பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்த பெட்ரோலை சின்னவன் மீது வீசி தாக்கினார். திடீரென்று உடல் முழுவதும் பெட்ரோலால் தாக்குவதை உணர்ந்த சின்னவன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

ஆனால், அவரை விடாமல் துரத்தி சென்ற செந்தில் அவர் மீது நெருப்பை வைத்தார். உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில் சின்னவன் தப்பியோடி அருகிலுள்ள கடையில் சரிந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

உடலில், 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் சின்னவனிடம், போலீசார் முன்னிலையில் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி கார்த்திக் ஆஷாத் வாக்குமூலம் எடுத்து கொண்டார். சின்னவனை பெட்ரோல் ஊற்றி எரித்த செந்திலை காவேரிப்பட்டணம் போலீசார் கைது செய்தனர்.

சின்னவன் உடலில் செந்தில் தீவைப்பதும், அவர் உடல் தீப்பிடித்து எரியும் நிலையில் ஓடும் ‘சிசிடிவி’ காட்சிகளும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in