Published : 16 Apr 2024 06:15 AM
Last Updated : 16 Apr 2024 06:15 AM

சென்னை | விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில் இருந்து 289 பயணிகளுடன் சென்னைக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பையா, பவானி என்கிற தம்பதி தனது 15 வயது மகளுடன் பயணம் செய்னர். விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, மூவரும் வீட்டுக்கு சென்றனர்.

பெற்றோரிடம் அழுத சிறுமி: இந்நிலையில், விமான பயணத்தின்போதும், வீட்டுக்கு வந்த பின்னரும் மகள் பேசாமல் சோகமாக இருந்ததைக் கண்ட பெற்றோர், மகளிடம் விசாரித்தனர்.

அப்போது, அந்த சிறுமி அழுது கொண்டே, விமானத்தில் பயணித்தபோது, தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி, தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டார். பயணிகளுக்கு மத்தியில் வெளியில் சொன்னால் அவமானம் ஏற்படும் என்பதால் சொல்லாமல் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

மென்பொருள் பொறியாளர்: இதையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மகளுடன் வந்த பெற்றோர், விமான நிலைய மேலாளரிடம் புகார் செய்தனர். விமான நிலைய காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில், விமானத்தில் சிறுமியின் இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்தது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜாவாஸ் ஜார்ஜ் (31) என்பதும், அவர் அயர்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுவதும் தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று அண்ணாநகர் சென்ற போலீஸார், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x