Published : 14 Apr 2024 05:59 AM
Last Updated : 14 Apr 2024 05:59 AM

குடும்ப பிரச்சினை காரணமாக தீ வைத்ததில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு @ காரைக்குடி

தங்கராஜ், லதா, நவீன்குமார்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்பப் பிரச்சினையில் தீ வைத்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தந்தையின் விபரீத முடிவால் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி வைத்தியலிங்கபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் தங்கராஜ்(60). தெருக்களில் டீ விற்கும் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி லதா(57). இவர்களது மூத்த மகன் நவீன்குமார்(35), சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

திருமணமான நிலையில் தனது தாய், தந்தையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். தங்கராஜின் 2-வது மகன் ராஜேஷ், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், தன்னை மனைவி சரிவர கவனிப்பதில்லை என்று அடிக்கடி தங்கராஜ் புகார்தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு நேரிட்டுள்ளது. நவீன்குமார் தனது தாயாருக்கு ஆதரவாக இருந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த நிலையில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை தன் மீதும், தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி லதா மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இருவர் மீதும் தீப்பற்றியதில், இருவரும் அலறினர்.

சப்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த நவீன்குமார், அவரது மனைவி செல்வி, ஒரு வயது மகன் ஆகியோர் வெளியே வந்தனர். தீப்பற்றியதைப் பார்த்ததும், செல்வி தனது மகனுடன் அவசரமாக வெளியேறினார். தங்கராஜ், லதா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாயாரைக் காப்பாற்ற முயன்ற நவீன்குமாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காரைக்குடி தெற்கு போலீஸார், தங்கராஜ், லதா ஆகியோரது சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x