சகோதரிகள் பாலியல் வழக்கில் தலைமறைவான முக்கிய நபர் கைது

பிரசன்னகுமார்
பிரசன்னகுமார்
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயதுள்ள சகோதரிகள், சமீபத்தில் தங்களது காதலர்களுடன் கோயில் திருவிழாவுக்குச் சென்றனர். பின்னர், திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டனர். அப்போது, சகோதரிகள் மற்றும் அவர்களது காதலர்களைக் கடத்திச் சென்ற இளைஞர்கள் சிலர், காதலர்களை கட்டிப்போட்டு அவர்கள் கண்முன்னே அப்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தனர். விசாரணைக்குப் பின்னர்,திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரண்குமார்(21), முத்தழகுபட்டியைச் சேர்ந்த வினோத்குமார்(26), திண்டுக்கல் முருகபவனத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(22) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதில் முக்கிய நபரான சுள்ளான்என்ற பிரசன்னகுமார்(25) தலைமறைவாக இருந்தார். இவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், திண்டுக்கல் அருகே பதுங்கி இருந்த பிரசன்னகுமாரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in