Last Updated : 17 Mar, 2024 07:21 PM

 

Published : 17 Mar 2024 07:21 PM
Last Updated : 17 Mar 2024 07:21 PM

ஓசூர் | காதலை கைவிடாத மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேர் கைது

மாணவியை கொலை செய்த  தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி

ஓசூர்: பாகலூர் அடுத்துள்ள பட்டவாரப்பள்ளியில் மகளை கொலை செய்த தாய், தந்தை உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் (37). இவரது 16 வயது மகள் பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் மாணவி கடந்த 14-ம் தேதி காலை வீட்டியிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என 15-ம் தேதி பாகலூர் காவல்நிலையத்தில் தந்தை பிரகாஷ் புகார் அளித்தார். பின்னர் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாகலூர் அருகே அண்ணா நகர் ஏரியில் மாணவி தலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இதுகுறித்து போலீஸார் மாணவியின் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், அந்த கேமராவை சிலர் துணிப்பபோட்டு மறைத்தது தெரியந்தது. பின்னர் நள்ளிரவு மாணவியின் தந்தை பிரகாஷ் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்ததும் அதில் பதிவாகி இருந்தது.

பின்னர் சந்தேகமடைந்த போலீஸார் மாணவியின் தந்தை பிரகாஷ் மற்றும் தாய் காமட்சி(34) ஆகிய இருவரிடம் தீவிரமாக விசாரணை செய்யும் போது, 2022-ம் ஆண்டு முதல் மாணவியும், முத்தாலி பகுதியைச் சேர்ந்த சிவா (23) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அப்போது மாணவிக்கு 18 வயது பூர்த்தியாகாததால், இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி சிவா, மாணவியை வீட்டை விட்டு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவும், மாணவியும் மீண்டும் காதலை தொடர்ந்தனர். இதனை மாணவியின் பெற்றோர் கண்டித்துள்ளனர்.

ஆனால் மாணவி காதலை கைவிடாத ஆத்திரத்தில், மாணவியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சித்தி மீனாட்சி ஆகியோர் சேர்ந்து மாணவியை தலையில் கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று மாணவியை ஏரியில் வீசிவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து பாகலூர் போலீஸார் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, சித்தி மீனாட்சி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x