Published : 02 Mar 2024 04:37 AM
Last Updated : 02 Mar 2024 04:37 AM

வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க ஜாபர் சாதிக்குக்கு எதிராக ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்

ஜாபர் சாதிக் | கோப்புப்படம்

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், வெளிநாடுதப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய ரசாயனப் பொருளான சூடோபெட்ரின், இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் செயல்பட்டு வருவது தெரியவந்தது. அங்கு உள்ள குடோனில் போலீஸார் கடந்த 15-ம் தேதி அதிரடியாக நுழைந்து, சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.

போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுகசென்னை மேற்கு மாவட்ட அயலகஅணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதற்கிடையே, டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பிப்.26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் போலீஸார் கடந்த 23-ம் தேதி சம்மன் ஒட்டினர். தொடர்ந்து அவரது வீடு பூட்டியே இருந்தது. விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வீட்டின் பூட்டைஉடைத்து உள்ளே சென்று போலீஸார் சோதனை நடத்தினர். முக்கியஆவணங்களை கைப்பற்றிய பிறகு,வீட்டுக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் மற்றும் கூட்டாளிகளை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜாபர் சாதிக்கின் பின்னனி, நட்பு வட்டாரம், தொழில்பங்குதாரர்கள் குறித்தும் தகவல்திரட்டப்பட்டு வருகிறது. அவர்சட்ட விரோதமாக சம்பாதித்தபணத்தை எங்கெல்லாம் முதலீடுசெய்துள்ளார் என்பது குறித்ததகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

சொத்துகள் முடக்கம்? அதன் தொடர்ச்சியாக ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்கை முடக்குவதோடு, அவரது அசையும்மற்றும் அசையா சொத்துகளை முடக்குவது குறித்தும் சட்ட வல்லுநர்களுடன் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ஆலோசித்து வருகின்றனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பாயும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x