Published : 26 Feb 2024 04:37 PM
Last Updated : 26 Feb 2024 04:37 PM

கரூரில் கொல்லப்பட்ட ராமர் பாண்டியின் உடல் ஒரு வாரத்துக்குப் பின் ஒப்படைப்பு

கரூர்: கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக வைக்கப்பட்டிருந்த ராமர் பாண்டியின் உடலை அவரது தந்தை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. ராமர் பாண்டியுடன் வந்த கார்த்திக் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராமர் பாண்டி என்கிற ராம கிருஷ்ணன் (38). இவர் கடந்த 19-ம் தேதி கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு இரு சக்கர வாகனத்தில் மதுரை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் அரவக்குறிச்சி அருகேயுள்ள பேரப்பாடி பிரிவு அருகே ராமர் பாண்டியை வெட்டிக் கொலை செய்தது. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமர் பாண்டி சடலம் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 20ம் தேதி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது. இக்கொலை தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் கடந்த 21ம் தேதி 5 பேர் சரணடைந்தனர். இதையடுத்து ராமர் பாண்டி சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர் சடலத்தை பெறாமல் அவரது குடும்பத்தினர் மதுரை சென்றுவிட்டனர். ராமர் பாண்டி சடலம் வைக்கப்பட்டிருந்ததால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் சரணடைந்த 5 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கடந்த 22ம் தேதி 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த 23ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் மேலும் ஒருவர் சரணடைந்தனர். கடந்த ஒரு வாரமாக ராமர் பாண்டி சடலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பும் தொடர்ந்தது. பிரேத பரிசோதனை முடிந்து 5 நாட்களான நிலையில் ராமர் பாண்டியின் தந்தை அரசன், ராமர் பாண்டி சடலத்தை இன்று (பிப்.26) காலை பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. கார்த்திக் தொடர்ந்து சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு மட்டும் போலீஸ் பாதுகாப்பு தொடர்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x