Published : 24 Feb 2024 12:16 PM
Last Updated : 24 Feb 2024 12:16 PM

ஆந்திரா | டிவி தொகுப்பாளர் கடத்தலுக்கு வழிவகுத்த போலி திருமண தகவல் தளம்: பெண் கைது

ஹைதராபாத்: தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஒருவரை வழிமறித்து கடத்திய குற்றத்துக்காக பெண் தொழிலதிபர் ஒருவரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் போல ஆள்மாறாட்டம் செய்து பெண் தொழிலதிபரிடமிருந்து பணம் பறித்ததைத் தொடர்ந்து இந்தக் கடத்தல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயது பெண் தொழிலதிபர் போகிரெட்டி திரிஷா. ஐந்து ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் நிர்வாக இயக்குநர். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லா என்பவரை கடத்தியுள்ளார். அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருமண தகவல் தளத்தில் பிரணவின் புகைப்படத்தை பயன்படுத்தி போகிரெட்டியிடமிருந்து ரூ.40 லட்சம் பணம் பறித்ததைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக தொழிலதிபரின் கூட்டாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த போலீஸாரின் விசாரணையில் பல சுவாரஸ்யமான விவரங்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள பெண் தொழிலதிபருக்கு திருமணத் தகவல் இணையம் ஒன்றின் மூலமாக சைதான்யா ரெட்டி என்ற நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம்களில் உரையாடல் தொடர்ந்தது. ஒருகட்டத்தில் அந்த ஆண் தனது தொழிலில் முதலீடு செய்யும்படியும், நல்ல வருமானம் வரும் என்றும் பெண் தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பெண் தொழிலதிபர் ரூ.40 லட்சத்தை யுபிஐ மூலமாக அந்த நபருக்கு அனுப்பியுள்ளார். பணத்தை பெற்றதில் இருந்து அந்த நபர் பெண் தொழிலதிபரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததுடன் திருமண ப்ரோஃபைலில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட போது அது பிரணவ் என்று தெரியவந்தது.

அப்போது அவர் சைதன்யா ரெட்டி என்ற நபர் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி திருமண தகவல் இணையதளத்தில் போலி ப்ரோஃபைலை உருவாக்கியுள்ளார் என்று தெரிவித்தார் மேலும் இதுகுறித்து சைபர் செல்லிலும் புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிரணவ் அந்தப் பெண் தொழிலதிபரின் எண்ணை ப்ளாக் செய்தார். இருந்த போதிலும் திருமணத்துக்காக மாப்பிள்ளை தேடிய அந்தப் பெண், விஷயங்களை முடிவுக்குக் கொண்டு வர தொலைக்காட்சி தொகுப்பாளரை கடத்த முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய அலுவலகத்தில் பணி புரியும் நபர் ஒருவரை பயன்படுத்தினார். அதற்காக ரூ.50,000 தருவதாக தெரிவித்திருந்தார். அந்த நபர் பிரணவின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அவரின் காரில் ஆப்பிள் ஏர்டேக் ஆப் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிப்.11ம் தேதி பெண் தொழில் அதிபரால் ஏற்பாடு செய்யப்பட்ட குழு ஒன்று பிரணவைக் கடத்தி தொழிலதிபரின் அலுவலகத்துக்கு கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் அவரைத் தாக்கியும் உள்ளனர். பெண் தொழிலதிபரின் கோரிக்கைகளுக்கு பதில் அளிப்பதாகக் கூறி பிரணவ் அங்கிருந்து தப்பியுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x