Published : 21 Feb 2024 05:27 AM
Last Updated : 21 Feb 2024 05:27 AM

போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் ஒன்றரை மாதத்தில் 358 பேர் கைது

சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை மாதத்தில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகளை முடக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில், போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது. இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கிக்குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யும் பணியும், வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் கடந்த ஜனவரி தொடங்கி இதுவரையில் போதைப் பொருள் விற்பனைத் தொடர்பாக 358 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பல கோடி மதிப்புள்ள 1,486 கிலோ கஞ்சா, 2200 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.

போதைப் பொருள் விற்பனை, கடத்தலுக்குப் பயன்படுத்திய 17 இருசக்கர வாகனங்கள், 6 இலகு ரக வாகனங்கள், ஒரு ஆட்டோ கைப்பற்றப்பட்டன. தமிழகத்தில் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 10581 என்றஇலவச தொலைபேசி எண்ணையும், 94984 10581 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவர்அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x