Published : 19 Dec 2023 06:41 AM
Last Updated : 19 Dec 2023 06:41 AM

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது: 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பல்வேறு இடங்களில் திருடியயதாக கைதான இருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 25 இருசக்கர வாகனங்கள்.

சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்களை திருடிவந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கொளுத்துவாஞ்சேரியைச் சேர்ந்தவர் கோகுல் (25). இவர் கடந்த 7-ம் தேதி இரவு,திருமங்கலம் சாந்தம் காலனி, 14-வது தெருவில் உள்ள தனதுசகோதரர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு வீட்டுக்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மறுநாள் காலைபார்த்தபோது அது திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

ஹரிஹரன், கலிமுல்லா

அதன் அடிப்படையில் கோகுலின் இருசக்கர வாகனத்தைத் திருடியதாக சென்னை கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தகலிமுல்லா (19), அவரது கூட்டாளிதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த ஹரிஹரன் (24) ஆகியஇருவரைக் கைது செய்தனர். விசாரணையில் கைதான இருவரும், திருமங்கலம் மட்டும் அல்லாமல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களைக் குறிவைத்து திருடிச் சென்று தஞ்சாவூர் மற்றும் அதன்சுற்றுப்புறங்களில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடமிருந்து, புகார் அளித்த கோகுலின்வாகனம் உட்பட 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கலிமுல்லா மற்றும் ஹரிஹரன் ஆகியோர் விசாரணைக்குப் பின்னர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x