Published : 12 Nov 2023 04:57 AM
Last Updated : 12 Nov 2023 04:57 AM

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் | ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பிறப்பித்துள்ளார்.

கடந்த அக். 25-ம் தேதி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது ஒரு நபர் பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளியே பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதற்குள் அவர் வீசிய பெட்ரோல் குண்டுகள் மாளிகைக்கு வெளியே விழுந்தன. மேலும், அவரிடம் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான நந்தனம் எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார், கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

கருக்கா வினோத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்ப தால், குண்டர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x