Published : 25 Oct 2023 05:21 PM
Last Updated : 25 Oct 2023 05:21 PM

ராஜஸ்தானில் அதிர்ச்சி: நிலத் தகராறில் உறவினரை டிராக்டர் ஏற்றிக் கொன்ற கொடூரம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான நிலத் தகராறில் தனது உறவினர் ஒருவரை சாகும் வரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பகதூர் சிங் மற்றும் அதர் சிங் குடும்பத்தினர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில், சர்ச்சைக்குரிய நிலத்துக்கு பகதூர் சிங் குடும்பத்தினர் இன்று காலை டிராக்டரில் வந்துள்ளனர். கொஞ்சம் தாமதமாக அதர் சிங் குடும்பத்தினரும் வந்துள்ளனர். பின்னர், இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் உண்டாகி ஒருவரை ஒருவர் கம்பு, கற்கலைக் கொண்டு தாக்கியுள்ளனர். இந்த மோதலில் அதர் சிங்கின் மகன் நிர்பத் கீழே விழுந்துள்ளார். அப்போது அவர் மீது எதிர் தரப்பைச் சேர்ந்த அவரது உறவினரான தாமோதர் டிராக்டரை ஏற்றியுள்ளார். அருகில் இருந்தவர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் நிர்பத் சாகும் வரை 8 முறை அவர் மீது முன்னும் பின்னும் டிராக்டர் ஏற்றிக் கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ள இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், "இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் ஐந்து நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில் பகதூர் சிங் மற்றும் அவரது இளைய சகோதரர் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அதர் சிங்கின் மகன் நிர்பத் உட்பட குடும்பத்தினர் மீது புகார் கொடுத்திருந்தனர்.

இதற்கிடையே, இந்தக் கொடூரமான சம்பவம் குறித்து மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம்சுமத்தியுள்ளது. மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், "ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் நிர்பத் என்பவர் டிராக்டர் ஏற்றிக் கொடூரமாக கொல்லப்படும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது ஒரு மனிதனின் கொலை பற்றியது மட்டும் இல்லை. இது மொத்த ராஜஸ்தான் நிலைமை பற்றியது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் இதுதான் நடக்கிறது.

இன்று பிரியங்கா காந்தி ராஜஸ்தான் வந்துள்ளார். அவர் பேரணியில் கலந்து கொள்வதற்கு முன்பாக சம்பவம் நடந்த இடத்துத்துக்குச் செல்லத் தயாரா? அங்கு சென்று காவல் துறை அதிகாரிகளை சஸ்பண்ட் செய்து தான் வெற்று முழக்கமிட மட்டும் இல்லை, செயல்படவும் தைரியம் இருக்கிறது என்று காண்பிக்கத் தயாரா? இது பிரியங்காவுக்கான அழைப்பு. அவர் முதலில் பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்லத் தயாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x