Published : 10 Oct 2023 02:14 PM
Last Updated : 10 Oct 2023 02:14 PM

போக்சோ வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டு சிறை: கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

முருகேசன் | கோப்புப் படம்

கரூர்: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் மலைக்கோவிலூரை சேர்ந்தவர் மஞ்சுளா. இவர் கணவரை பிரிந்து தனது 8 வயது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பகுதியில் அவரது 8 வயது மகன் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் தாய் மஞ்சுளா அதிகாலையிலே சித்தாள் வேலைக்கு சென்றுவிட்டு மாலை தான வீடு திரும்புவார்.

சிறுவன் தங்கையை அங்கன்வாடிக்கு அனுப்பிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டு பள்ளி முடிந்த பிறகு தங்கையை அழைத்து வந்து தாய் வரும் வரை வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். இவர்களது வீட்டருகே முருகேசன் (29) என்பவர் தாய் மாமா மணி மற்றும் தம்பி ஐயப்பன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

முருகேசனுக்கு திருமணமாகவில்லை. கட்டிடங்களுக்கு பள்ளம் (அஸ்திவாரம்) பறிக்கும் வேலைக்கு சென்ற வந்துள்ளார். தாய்மாமா மணி, தம்பி ஐயப்பன் வேலைக்கு சென்று வருகின்றனர். யாரும் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த 8 வயது சிறுவனுக்கு முருகேசன் சாப்பிடுவதற்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவது, வீடியோக்கள் பார்ப்பதற்கு செல்போனை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சிறுவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்று முருகேசன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இதனை வெளியே கூறினால் கத்தியால் குத்தி கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இது குறித்து கரூர் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமா பானு இன்று (அக். 10ம் தேதி) தீர்ப்பு அளித்தார். அதில், சிறுவனை கடத்தி சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், இயற்கை மாறான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததை மற்றும் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அபராதம் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x