Last Updated : 11 Sep, 2023 10:10 PM

 

Published : 11 Sep 2023 10:10 PM
Last Updated : 11 Sep 2023 10:10 PM

புதுச்சேரி | மின்கட்டண பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.82.17 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் ரூ.82.17 லட்சம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி மின்துறையில் தலைமை அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக இருந்தவர் சண்முகசுந்தரம் (55). இவர் மின்கட்டணம் செலுத்துவோரிடமிருந்து வசூலிக்கும் பணத்தை மொத்தமாக வாங்கி வங்கியில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2004 செப்டம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான ரூ.82 லட்சத்து 17ஆயிரத்து 143 ரூபாயை வங்கியில் செலுத்தாமலே ரசீதை மட்டும் தனது உயர் அதிகாரியான பெருமாளிடம் கொடுத்துள்ளார். பணம் செலுத்ததாது குறித்து 2005 ஆம் ஆண்டு பொது தணிக்கையின் போது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் சண்முகசுந்தரம் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீதும், அவரைக் கண்காணிக்கத் தவறிய மின்துறை அலுவலர் பெருமாள் மீதும் புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதியப்பட்டது.

மின்துறையில் வசூல் பணம் மோசடி தொடர்பான வழக்கு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில், சண்முகசுந்தரத்தின் 2 குறிப்பிட்ட சொத்துகள் முடக்கப்பட்டன. ஆனால் அதில் ஒரு சொத்தை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வராமலேயே சண்முகசுந்தரம் விற்றதாக புகார் எழுந்தது.

அவருக்கு சார்பதிவாளர் ராதாகிருஷ்ணன் உதவியுள்ளார். ஆகவே சார்பதிவாளர் ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குப் பதிவானது. வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். அதையடுத்து சண்முகசுந்தரம், பெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்ற போது, பெருமாளும், ராதாகிருஷ்ணனும் மரணமடைந்தனர். தற்போது வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தலைமை நீதிபதி செல்வநாதன் இன்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு விவரம்: குற்றம் சாட்டப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு ஐபிசி 409வது பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஊழல் தடுப்புச்சட்டம் 13-1 சி பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x