Last Updated : 31 Aug, 2023 08:50 PM

 

Published : 31 Aug 2023 08:50 PM
Last Updated : 31 Aug 2023 08:50 PM

நியோ மேக்ஸ் முறைகேடு | தனி டிஎஸ்பி நியமித்து விசாரணை தீவிரம்: போலீஸ் அதிகாரி சகோதரர் சிக்குகிறார்?

விருதுநகர்: தனி டிஎஸ்பி நியமித்து, ‘நியோ- மேக்ஸ்’ முறைகேடு புகார்களின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய போலீஸ் அதிகாரியின் சகோதரர் மற்றும் தலைமறைவானவர்களை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ‘நியோ-மேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனம் கூடுதல் வட்டி மற்றும் செலுத்திய தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்த தாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டோர் அளித்த புகார்களின்பேரில், மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் ‘நியோ மேக்ஸ்’ மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள் மதுரை கமலக்கண்ணன் (55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் இயக்குநர்களாக செயல்பட்ட தேவகோட்டை சைமன் ராஜா, மதுரை கபில், தூத்துக்குடி இசக்கிமுத்து, சகாயராஜ் மற்றும் மதுரை பைபாஸ் ரோடு எல்ஐசி அதிகாரி பத்ம நாபன், விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரம் மாரிச்சாமி (50), சிவகங்கை மாவட்டம் குமாரபட்டி மலைச்சாமி உட்பட 9 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், சைமன் ராஜா, கபில், பத்மநாபன் ஆகியோர் ஜாமீன் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், நியோ- மேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்காப்பட்டோர் புகார் அளிக்க, தயங்கிய நிலையில், மதுரை, விருதுநகரில் புகார் மேளா நடத்தி புகார்கள் வாங்கினர். ஆனாலும் தொடர்ந்து பணம் வசூலித்த முகவர்களால் புகார் அளிப்பது தடுக்கப்படுவதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கை ஏற்கெனவே மதுரை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி குப்புசாமி தலைமையில் ஆய்வாளர் கமர்நிசா உள்ளிட்டோர் விசாரித்த நிலையில், தற்போது, தனி டிஎஸ்பி ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு்ளது. இதன்படி, மணிஷா என்ற பெண் டிஎஸ்பி தலைமையில் அவருக்கு கீழ் ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள் குழு வழக்கை விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கேட்டபோது, “இவ்வழக்கின் முக்கிய நபர்களான கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோர் தொடர்ந்து தலைமறைவாகியுள்ளனர். இவர்களை தனிப்படை மூலம் தேடுகிறோம். முக்கிய போலீஸ் அதிகாரி ஒருவரின் சகோதரரும் இந்நிறுவன முறைகேட்டில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிகிறது.

வழக்கில் சிக்கிய நபர்களின் வங்கி கணக்கு போலீஸார் முடக்கிய பட்டியலில் அந்த போலீஸ் அதிகாரியின் சகோதரரின் பெயரும் இடம் பெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் விதமாக நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் எவ்வித தயக்கமின்றி புகார் அளித்து ஒத்துழைக்கவேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x