Published : 08 Jul 2023 03:25 PM
Last Updated : 08 Jul 2023 03:25 PM

சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற சம்பவம்: இளம்பெண் உயிரிழப்பு; இருவர் கைது

இந்திரா நகர் ரயில் நிலையம் | கோப்புப் படம்

சென்னை: சென்னையில் ஓடும் ரயிலில் செல்போனைப் பறிக்க இருவர் முயன்றபோது, தவறி விழுந்து படுகாயமடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாறு இந்திரா நகரில் இருந்து கடந்த ஜூலை 2-ம் தேதி, மின்சார ரயிலில் ப்ரீத்தி என்ற இளம்பெண் பயணித்துள்ளார். அப்போது அவர் கையில் தனது செல்போனை வைத்திருந்தார். திடீரென அவரது செல்போனை இருவர் பறிக்க முயன்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ப்ரீத்தி, அதனை தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ப்ரீத்தி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ப்ரீத்தி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு ப்ரீத்தி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், அடையாறு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x