Published : 04 Jun 2023 02:33 PM
Last Updated : 04 Jun 2023 02:33 PM

ராஜபாளையம்: மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றவாளியை, மருத்துவப் பரிசோதனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றபோது மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மணிவண்ணன்(34). வாய் பேச முடியாதவர். இவருக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தனது உறவினரான பிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 6 மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் மணிவண்ணன் கடந்த ஆண்டு பாண்டிச்செல்வி (22) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டியில் வசித்து வந்தார்.

மணிவண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தனது பாட்டி இறந்து விட்டதால், பாண்டிச்செல்வி ஒத்தபட்டிக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை மணிவண்ணன் மது போதையில் ஒத்தபட்டிக்கு சென்றார். அவரை கண்ட பாண்டிச்செல்வி வீட்டின் கதவை பூட்டி கொண்டார். சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்ற மணிவண்ணன், பாண்டிச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாண்டிச்செல்வியை கத்தியால் குத்தி மணிவண்ணன் கொலை செய்தார்.

ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர். நேற்று இரவு மணிவண்ணனை சிறையில் அடைப்பதற்காக, மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக போலீஸார் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து மணிவண்ணன் தப்பி ஓடினார். தப்பி ஓடிய மணிவண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x