Published : 17 Mar 2020 11:24 AM
Last Updated : 17 Mar 2020 11:24 AM

'சீன வைரஸ்'- கரோனா குறித்து ட்ரம்ப் பரபரப்புக் குற்றச்சாட்டு

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா குறித்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன வைரஸ் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ், சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள ஹூபெய் மாகாணத்தில் வூஹான் நகரத்தில் இருப்பவர்களுக்கு முதன்முதலாகத் தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வூஹான் நகரமே தனிமைப்படுத்தப்பட்டது.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது.

இதற்கிடையே அமெரிக்காவில் சிலர் கரோனா வைரஸை வூஹான் வைரஸ் என்று அழைத்தனர். சீனாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கிய கரோனா வைரஸ், அமெரிக்காவில் இருந்து வந்திருக்கலாம் என்று சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க உயரதிகாரிகளும் சீனாவின் மீது குற்றம் சுமத்தினர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கரோனாவை சீன வைரஸ் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சீன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் அமெரிக்கா முழுமையான ஆதரவு அளிக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் சீனாதான் இந்த வைரஸுக்குக் காரணம் என்று கூறிவந்த நிலையில், முதல்முறையாக ட்ரம்ப்பே நேரடியாக இதைத் தெரிவித்துள்ளார். கரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ட்ரம்ப்பின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் விமர்சகர்கள் இது இனவெறித் தாக்குதல் என்றும் ஆசிய- அமெரிக்க சமூகத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x