

சென்னை: விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது குறித்து நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்த நிலையில், சில மணி நேரங்களில் முழு படமும் ஹெச்டி தரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் தயாரிப்பாளர் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.