

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பிறகு நடக்கும் முதல் பொதுக்குழு கூட்டம் இது. இதில் இச்சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன், துணைத் தலைவர்கள் ஆர்.கே.சுரேஷ், கமலக் கண்ணன், செயலாளர்கள் கதிரேசன், ராதாகிருஷ்ணன், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், பொருளாளர் என்.சுபாஷ் சந்திரபோஸ் உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மானியத்தொகை கடந்த 10 வருடமாக நிலுவையில் உள்ளது. அதை புதிதாக பதவியேற்க இருக்கும் தமிழ்நாடு அரசு உடனடியாக வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
தமிழ் சினிமாவில் தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ளது போல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் வருவாய் பகிர்வு (ரெவனியூ ஷேர்) முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும்.
தயாரிப்பாள்களின் லாப- நஷ்டங்களில் அவர்களும் பங்குகொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே நடைபெற்ற பொதுக் குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்கள். மேலும், நடிகர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வரவில்லை.
ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப் படுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் தயாரிப்பாளர்கள் கூட இனி திரைப் படங்கள் எடுக்க தயங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வருவாய் பகிர்வு என்ற முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஷயத்தை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்துக்குக் கொண்டு சேர்க்கும் வகையில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், நடிகர் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.