

எனது திருமணம் 1993-ம் ஆண்டு நவ.19-ல் நடைபெற்றது. 1994-ம் ஆண்டு செப்.6-ல் எனக்கு மகள் பிறந்தார். எங்களின் முதல் வருட திருமண நாளை குழந்தையுடன்தான் கொண்டாடினோம். மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த மகளை தூக்கியதுமே, “அம்மா, மாமா பாருங்க” என்றுதான் சொன்னேன்.
ஏனென்றால், என் அக்கா குழந்தைகளைத் தூக்கித் தூக்கி அப்படி சொல்வது வழக்கம் என்பதால் என் மகளையுமே வாய்தவறி அப்படிச் சொல்லி விட்டேன். பிறகு சுதாரித்து, “அப்பா பாருங்க” என்றேன். அப்போது பார்க்கும் போது பொம்மை மாதிரி இருந்ததால், இப்போது வரை மகளை பொம்மை என்றுதான் அழைப்பேன்.
அப்போது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுதான். நடிப்பு பக்கம் வரவில்லை. குழந்தைக்கு சிறுவயதிலேயே நடனத்தில் விருப்பம். மூன்று, நான்கு வயதிலேயே நன்றாக ஆடுவார். நாங்கள் கைதட்டுவோம். பிறகு ஸ்கூலில் சேர்த்தோம். நன்றாகப் படித்தார். அவர் படிக்கும் ஸ்கூலில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் அவர்தான் கோரியோகிராபர்.
அவர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் முன்னால் அங்கும் இங்கும் ஏதோ குழப்பத்தோடு அலைந்து கொண்டிருந்தார். எதையோ என்னிடம் சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. உடனே அழைத்து, “என்ன விஷயம்? உங்களை யார் லவ் பண்றாங்க?” என்று கேட்டேன். அவர் அதிர்ச்சியாகப் பார்த்தார்.
அப்பா உன் வயதை கடந்துதான் வந்திருக்கிறேன் என்று சொன்னேன். “அது என் ஃபிரண்டு, என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான்” என்று சொல்லும்போதே, அழுவது போல முகம் மாறியது. “இதுக்கு ஏன் அழணும்? ஒரு ஆணுக்குப் பெண்ணைப் பிடிப்பதும் பெண்ணுக்கு ஆணைப்பிடிப்பதும் சிவன் காலத்தில் இருந்தே நடக்குது.
இதில் வருத்தப்பட ஏதுமில்லை” என்றேன். பிறகு, “இதெல்லாம் இந்த வயசுல வருவதுதான்; விடும்மா” என்று சொல்லி விட்டேன். பிறகு அந்தப் பேச்சை எடுக்கவில்லை. நன்றாகப் படித்தார். நீச்சல், குதிரையேற்றம் போன்ற பயிற்சிகளைப் பெற்றார்.
நான் நடித்த ‘பயணம்’ படம் வெளியாகி இருந்த நேரத்தில், லயோலா கல்லூரி யில் மகளை விஸ்காம் சேர்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போதைய சபாநாயகர் ஜெயக்குமார், சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தார். அதைக் கொடுத்ததும் உள்ளே வரச் சொன்னார்கள். நானும் என் மகளும் சென்றோம்.
என்னைப் பார்த்ததும் அங்கிருந்த ஃபாதர், “ஸ்தோத்திரம் ஃபாதர்” என்று சொன்னார். நானும் அப்படியே சொன்னேன். “பயணம் படத்துல உண்மையிலேயே ஃபாதரா வாழ்ந்திருந்தீங்க. அந்த பிரேயர் எல்லாம் அவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க. நல்லா இருந்தது” என்றவர், “உங்க மகளுக்காக வந்தீங்களா?” என்று கேட்டார்.
ஆமா என்றேன். உடனே இடம் கொடுத்தார்கள். அங்கு படித்தார். பிறகு அவரும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஒரு நாள், வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குப் போனபோது, என் மனைவி, “அகுல் வந்தார். மகள் ஐஸுவை திருமணம் பண்ணிக்கிறதா கேட்கிறார்” என்றார்.
நான் யோசிக்கவே இல்லை, சரி என்று சொல்லிவிட்டேன். சின்ன வயதில் என் மகள், தன்னைப் பிடித்திருக்கிறது என ஒரு ஃபிரண்ட் சொன்னதாக சொன்னாரே, அதே பையன்தான் அகுல். அவர்களின் நட்பு, காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் வீட்டிலும் பேசினோம். எல்லோரும் தங்கமான மனிதர்கள்.
திருமணம் செய்து வைத்தோம். மனம் ஒற்ற தம்பதியராக வாழ்ந்து வருகிறார்கள். இன்று என் மாப்பிள்ளை என்ன சொன்னாலும் நான் மறுப்பின்றி சம்மதிப்பேன். மிக பொறுப்பானவர். நான் என் மகளிடம் எப்போதும் எனக்கு பேத்திதான் வேண்டும் என்பேன்.
நான் ஷீர்டி பாபாவிடமும் வேண்டினேன். பிறகு இயக்குனர் தம்பி ஏ.எல். விஜய்யின் படத்துக்காக வெளிநாடு சென்று திரும்பியபோது, என் மகள் தாய்மை அடைந்திருந்த செய்தி கிடைத்தது. எல்லையற்ற மகிழ்வடைந்தேன். பேத்திதான் பிறப்பார் என்று எதிர்பார்ப்பில் இருந்தேன்.
பிறகு நாட்கள் செல்ல செல்ல என் எதிர்பார்ப்பு கூடுதலானது. 2024-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, தீபாவளி அன்று மகளை மருத்துவமனை யில் சேர்த்தோம். மதியம் 12 மணிக்கு ஒரு நர்ஸ், “உங்களுக்கு பேத்தி பிறந்திருக்கார்” என்று சொன்னார்.
எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. அவருக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளோம். அவர்தான் இப்போது எங்கள் அனைவரின் உயிர். என் பேத்தி தினம் காலை மாலை வீட்டில் இருக்கும் பாபா சிலை முன்பு நின்று கும்பிட்டு விட்டு வருவார்.
நான் பாபாவிடம் வேண்டிக்கேட்டு பிறந்ததால் பாபாவிடம் பக்தியாக இருக்கிறார் என நினைத்துக்கொள்கிறேன். இப்படி எங்கள் வாழ்க்கை, மகள் + மருமகன்= எங்கள் உயிர் பேத்தி என்ற நிலையில் நல்லபடியாகச் சென்றுகொண்டிருக்கிறது.
(திங்கள்தோறும் பேசுவோம்)