“அப்பாவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் மகள்” - ‘மெல்லிசை’ இயக்குநர் திரவ் நேர்காணல்
விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்து இயக்கிய திரவ், அடுத்து இயக்கி இருக்கும் படம், ‘மெல்லிசை’. கிஷோர், ஜார்ஜ் மரியான், ஹரிஷ் உத்தமன், சுபத்ரா ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் அப்பா - மகள் உறவை பேசுகிறது. டிசம்பர் மாதம் வெளியாக இருக்கும் இப்படம் பற்றி இயக்குநர் திரவிடம் பேசினோம்.
அப்பா - மகள் கதை நிறைய வந்திருக்கே... இதுல எப்படி?:
நிறைய கதைகள் வந்திருந்தாலும் திரைக்கதை வேறாகத்தானே இருக்கும். இதுவும் அப்படித்தான், ஏற்கெ னவே வந்ததுல இருந்து மாறுபட்டதா இந்தக் கதை இருக்கும். அப்பாவை ஹீரோவாக பார்க்கிறவர் மகள். அப்பா நல்லா பாடுவார்.
தன்னோட பிறந்த நாளுக்கு ரியாலிட்டி ஷோவில் நீங்க பாடணும்னு தன்னோட விருப்பத்தைச் சொல்லுறார். மகளை ஏமாற்ற வேண்டாம்னு அவரும் ஒரு ஷோவுல போயி பாடறார். அதுக்குப் பிறகு அவர் வாழ்க்கை எப்படி மாறுது, அவர் சூழல் எப்படியிருக்கு, அப்படிங்கறது கதை.
நடிகர் கிஷோரை எப்படி தேர்வு பண்ணுனீங்க?
ஒரு ஸ்கூல்ல பி.டி. மாஸ்டரா வேலை பார்க்கிற கதாபாத்திரத்துக்கு அவர் சரியா இருப்பார்னு தோணுச்சு. என் கதைப்படி ஒரு பி.டி. மாஸ்டருக்கான தோற்றமும் அவருக்கு இருந்தது. அவர் ‘ஹரிதாஸ்’ படத்துல பண்ணின எமோஷனல் விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். இந்தக் கதையில வர்ற அப்பா- மகள் விஷயங்களுக்கு அவர் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சதால இந்தப் படத்துக்குள்ள வந்தார்.
‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’னு டேக் லைன் வச்சிருக்கீங்களே?:
ஆமா. எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். நம்ம அடையாளத்துக்கான ஒரு தேடல் இருந்துட்டே இருக்கும். அது எங்க நிறைவு பெறும்னா, நம்மை ரசிச்சு யாராவது ஒருத்தர் அங்கீகரிக்கும்போதுதான் நிறைவு பெறும். ஒரு நாலு வரி கவிதை எழுதினா கூட, அதை யாராவது ஒருத்தர் பிரம்மாதம்னு சொன்னா, அடுத்த நிமிடமே, ஒரு கவிஞனா மாறிடுறீங்கள்ல, அந்த ஒரு சின்னப்புள்ளிதான் இந்தப் படத்தோட ஆரம்பமே.
இந்தக் கதையில அப்பாவுக்கான அங்கீகாரத்தை அவர் மகள் கொடுக்கிறதா திரைக்கதை இருக்கும். நம்ம அங்கீகாரத்துல முக்கியமான விஷயமா இருக்கிறது அன்பு மட்டும் தான். அந்த அன்பை இந்த பிரபஞ்சம் தேடிட்டே இருக்கும். அதுதான் கதை.
மகள் கதாபாத்திரத்துல யார் நடிச்சிருக்காங்க?
ஆடிஷன் வச்சு தனன்யாங்கற சிறுமியைத் தேர்வு பண்ணினோம். இந்தப் படத்துக்கு முன்னால சின்ன சின்ன ரோல்ல சில படங்கள்ல நடிச்சிருக்காங்க. இதுல வர்ற யாழினி கதாபாத்திரமா அவங்களைப் பார்க்கும்போது ரொம்ப பொருத்தமா இருந்தது. ரிலீஸுக்குப் பிறகு அவங்க நடிப்பு பேசப்படும்.
கதைப்படி அப்பா, மகளா கிஷோர், தனன்யா நடிச்சிருக்காங்க. அம்மா - மகன்னு இன்னொரு ஜோடியும் இருக்கு. அப்பா வேலை பார்க்கிற அதேஸ்கூல்ல அம்மா கணக்கு டீச்சரா இருப்பாங்க. அவங்களுக்கு மகனை ரொம்ப பிடிக்கும். அப்பா - மகளும் அம்மா -மகனும் அப்படியே முரணா இருப்பாங்க. படம் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு இந்த ஃபேமிலியை ரொம்ப பிடிக்கும்.
இதுல அம்மாவா நடிச்சிருக்கிற சுபத்ராவும் கிஷோரும் ஏற்கெனவே ‘வடசென்னை’ல நடிச்சிருக்காங்களே...
ஆமா. அதுல அவங்க ரெண்டு பேருக்கும் நிறைய காட்சிகள் இருந்ததுன்னு சொல்லியிருக்காங்க. அந்தப் படத்துல அதை குறைச்சிட்டாங்க. அவங்க ஏற்கெனவே ஜோடியாக நடிச்சிருக்கிறதால, இதுல அவங்க தொடர்பான காட்சிகள் ரொம்ப யதார்த்தமா இருந்தது.
மகனா, ஜஸ்வந்த் மணிகண்டன் நடிச்சிருக்கார். ஜார்ஜ் மரியான் சார், ஸ்கூல் பிரின்சிபலா நடிச்சிருக்கார். ஹரிஷ் உத்தமன் நெகட்டிவ் கேரக்டர்ல வர்றார். சென்னை பம்மல் பகுதியில நடக்கிற கதை.
‘மெல்லிசை’ங்கற தலைப்பு ஏன்?
இது ரொம்ப மென்மையான, மெலடி மாதிரியான கதை அப்படிங்றதால இந்த தலைப்பு வச்சோம்.
