

‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், அடுத்து இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுப.வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைக்கதை, வசனத்தை கவிதா பாரதியும் தயாள் பத்மநாபனும் இணைந்து எழுதியுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறும்போது, “இது தீர்மானமான நம்பிக்கையிலிருந்து பிறந்த திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக்கதையின் மீது நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் பணியாற்றியது. இந்தப் படம் பார்வையாளர்களைச் சிந்திக்க வைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.