

நாக்பூர்: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது.
தனது 7-வது அரை சதத்தை கடந்த அபிஷேக் சர்மா 35 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3பவுண்டரிகளுடன் 25 ரன்களும் சேர்த்தனர்.
இறுதிக்கட்ட ஓவர்களில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன் 10, இஷான் கிஷன் 8, ஷிவம் துபே 9, அக்சர் படேல் 5 ரன்களில் நடையை கட்டினர்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 44-வது முறையாகும். நியூஸிலாந்துக்கு எதிராக மட்டும் 5-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் வேட்டையாடி உள்ளது.
239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. முதல் இரண்டு ஓவர்களில் கான்வே (0) மற்றும் ரச்சின் ரவீந்திரா (1) ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் 78 மற்றும் மார்க் சாப்மேன் 39 ரன்கள் எடுத்தனர். மிட்செல் 28, ராபின்சன் 21 மற்றும் சான்ட்னர் 20 ரன்கள் எடுத்தனர்.
அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 48 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வருண் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் தாள் 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.