

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சர்தார்’, வெற்றி பெற்ற பிறகு அதன் அடுத்த பாகம், ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசை அமைத்துள்ளார்.
நாளை (செப்.10) வெளியாக இருக்கும் இப்படம் பற்றி கார்த்தி கூறும்போது, “சர்தார் படத்தின் கதைக்கு முன்பு நடந்த விஷயமும், அதற்குப் பிறகு நடக்கும் விஷயமுமாக ‘சர்தார் 2’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் படம் இது. சில ஆங்கிலப் படங்களைப்பார்க்கும் போது நமக்கு ஏக்கமாக இருக்கும், எப்போது நம் ஊரில் இதுபோன்ற விஷுவலோடு, ஆக் ஷனோடு படம் பண்ணப் போகிறோம் என்ற ஆசை வரும். அதைக் கொடுப்பதற்கான முயற்சியாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
அந்த வகையில் இயக்குநர் மித்ரன் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடமாக போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடந்திருக்கின்றன. படத்தின் டீஸருக்கும், டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் பார்வையாளர்களை மகிழ்விக்கும்” என்றார்.