

சினிமா எனக்கு பலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. சினிமாவுக்கு உள்ளும் வெளியும் ஏராளமானவர்கள் எனக்கு பழக்கமாகி இருக்கிறார்கள். சிலர் என் சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை நண்பர்களாக தொடர்கிறார்கள். சிலர் புதிதாகப் பழகி குடும்ப நண்பர்களாக ஆகியிருக்கி றார்கள். அப்படி ஆனவர்களில் ஒருவர் ஷபானா.
நான் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு ஆகிவிடும். சில நேரம் இரவிலும் படப்பிடிப்பு இருக்கும் என்பதால், சின்னத்திரை தொடர்கள் பார்க்கும் வாய்ப்பு அதிகம் இல்லை. நான் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருந்த போது கூட நேரமின்மையால் பெரும்பாலும் பார்க்க வாய்ப்பிருந்ததில்லை. ஆனால் என் மனைவி அடிக்கடி பார்ப்பார்.
எப்போதாவது சீக்கிரமாக வந்து வீட்டில் நான் பார்க்கும் போது ஏதாவது ஒரு சீரியல் ஓடிக்கொண்டிருக்கும். அதைப் பார்ப்பேன். அப்படி எதேர்ச்சையாக நான் பார்த்த சீரியல், ஜீ தொலைக்காட்சியில் வந்த ‘செம்பருத்தி’. அதில் பிரியா ராமன் மேடம் நடித்திருப்பார். இன்னும் பல திறமையான நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள்.
எனக்கு அதில் நாயகியாக நடித்த ஷபனாவை பார்த்த போது என் மகளைப்பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதன் காரணமாக அந்த தொடரை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. என் மகள் ஐஸ்வர்யாவிடம் அந்த சேனலின் ஆப்-ஐ போனில் டவுன்லோடு செய்து தரச்சொன்னேன். பிறகு தினமும் அத்தொடரைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தினமும் அந்தக்குழந்தையை (ஷபானாவை) பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல், பாசம் ஏற்பட்டு விட்டது.
இந்த நேரத்தில் நான் ஒரு படப்பிடிப்புக்காக பல்லடம் சென்றிருந்தேன். அதில் என்னுடன் நடித்துக்கொண்டிருந்த பார்வதி என்ற நடிகை (அவரும் என்னை அப்பா என்றே அழைப்பார்) போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென என்னருகில் வந்து, “உங்களுக்கு ஒரு ஹாய் சொல்லணுமாம்...” என்று போனை என்னிடம் கொடுத்தார்.
எனக்கு போனில் யார் இருக்கிறார் என்பது தெரியாது. யாரோ பேச நினைக்கிறார்கள் போலிருக்கிறது என நினைத்து போனை வாங்கினேன். அது வீடியோ கால். பார்த்தால், ஷபானா. நான் ஆச்சரியப்பட்டதைபோலவே அவருக்கும் ஆச்சரியம். என்னைப் பார்த்ததும், “ஐயோ, நீங்களா? உங்களை வந்து பார்க்கிறதுக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் கொடுங்க” என்றார்.
நான் என் உள்ளத்திலிருந்து “அப்பாவை பார்க்கிறதுக்கு அப்பாயின்மென்ட் எல்லாம் தேவையில்லைம்மா” என்று சொன்னேன். பிறகு போன் எண்களை பெற்றுக் கொண்டோம். தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்புவேன்!’ சாப்டீங்களாடா என்னை பெத்த தாயீ ’ என்று என் மகள் ஜஷுவை கேட்பது போலவே ஷபுவையும் கேட்பேன்.
என் மகளுக்கு அடுத்தபடியாக, அவர் மீதும் பாசம். என் மகள், மகனையும், என் மனைவியையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஐசக்கா, தம்பி, அம்மா என்றே சொல்வார். நானும் என் மனைவியும் எங்கேயாவது வெளியில் செல்லும் போது போனில் அவர் வந்தால் என்மனைவியிடம் பேசச்சொல்லுவேன். “அம்மா எப்படியிருக்கீங்க?” என்று அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒரு முறை ‘செம்பருத்தி’ தொடரின் விழா ஒன்றுக்காக என்னை அழைத்திருந்தார்கள். சென்றேன். எல்லோரும் என்னிடம் வணக்கம் சொன்னார்கள். அது பொது இடம் என்று கூட பார்க்காமல் ஷபும்மா என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
என் கண்களில் ‘குபுக்’கென்று கண்ணீர் வந்து விட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டேன். என் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பும் போது என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதே உணர்வு அப்போது ஏற்பட்டது. அவர் எழுந்ததும் தலையில் கை வைத்து ‘நல்லா இருடா கண்ணு” என்று ஆசீர்வதித்து விட்டு வந்தேன்.
பின்னர் ஒருநாள் வீட்டுக்கு வரச்சொன்னார். அப்போது அவர் குன்றத்தூர் அருகே அப்போது வசித்தார். ஒரு தீபாவளி அன்று, மகளுக்கான சீர் வரிசையுடன் அவரைப் பார்க்க சென்றேன். அப்படி பழக்கம் தொடர்ந்தது. அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராக, ‘நான் பெறாத மகளாக’ ஆகிவிட்டார். பின்னர் அவர் திருவேற்காடு வந்துவிட்டார். அவரும் கணவரோடு எங்கள் வீட்டுக்கு வருவார்.. நாங்களும் செல்வோம்.
பின்னர் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில், என் கையால் விருது கொடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். அப்போது பிசியாக இருந்ததால் விழாவுக்கு வர இயலாத காரணத்தை சொன்னேன்.
பிறகு, “இல்லை சார், உங்க பொண்ணுக்கு நீங்கதான் கொடுக்கணும்” என்று சொன் னார்கள்.. ‘அப்படியென்றால் கண்டிப்பாக வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு, நேரத்தை அப்படி இப்படி மாற்றிவிட்டு சென்றேன்.
ஆனால், “நான் வருகிறேன்’ என்று ஷபானாவிடம் சொல்லிவிடாதீர்கள்’ என்றேன். சரி என்று கேட்டுக்கொண்டார்கள். விழாவுக்கு சென்றேன். அப்போது விருது கொடுப்பதற்காக வந்த என்னைப் பார்த்ததும் அவருக்கு அதிக மகிழ்ச்சி. அவருக்கு கண்ணீரே வந்து விட்டது. அவர் கணவர் நடிகர் ஆர்யனும் என் மீது ‘அப்பா’ என்று மிகவும் பாசமாக இருப்பார்.
இப்படியாக ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. என் மகள் ஷபுவுக்கும், மாப்பிள்ளை ஆர்யனுக்கும் நிறைய வாய்ப்புகள் வந்து வசதிகள் பெருக இறைவன் அருளட்டும்.
(திங்கள்தோறும் பேசுவோம்)