சூர்யா தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்: ஆர்.ஜே.பாலாஜி உற்சாகம்

சூர்யா தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்: ஆர்.ஜே.பாலாஜி உற்சாகம்
Updated on
2 min read

ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார் என்று சூர்யா குறித்து ’கருப்பு’ இசை வெளியீட்டு விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.

‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் த்ரிஷா தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை நேரலையில் சாய் அபயங்கர் தனது குழுவினருடன் பாடினார். இந்த விழாவில் பின்பு படக்குழுவினர் அனைவருமே ‘கருப்பு’ படம் குறித்து பேசினார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்புசாமி கோவிலுக்கு வந்திருந்தேன். அப்போதே, ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் கூறிவிட்டேன். இப்படம் முழுவதும் கருப்புசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் பயணித்துள்ளார். அதுவே, இப்போது மிகப்பெரிய பலம் என நம்புகிறேன்.

இப்படத்துக்காக சாய் அபயங்கரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தபோது, அவருக்கு இது முதல் படம். ஆனால், இப்போது பல படங்களுக்கு ஒப்பந்தமாகிவிட்டார். சில சமயங்களில் அவருடைய பாடல் வெளியாகும்போது, மக்கள் அவரை திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், அப்பாடல் வெளியான 15 நிமிடங்களில் அப்பாடல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். த்ரிஷாவால் இன்று வர இயலவில்லை.

ஆனால், அவருக்கு மனமார்ந்த நன்றி. த்ரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக தொடர்ந்து உச்சத்தில் நீடிப்பது சாதாரண விஷயமல்ல. சமீபத்தில் அவர் நடித்த படங்களிலேயே, இதில் அவருக்கு சிறந்த கதாபாத்திரமாக அமையும். ஒரு பெரிய படத்தையும், நடிகரையும் எப்படிக் கையாள்வது என்பது குறித்த புரிதல் எனக்கு இல்லை. நான் அது குறித்து யோசித்தபோது, ஒரு மனிதர் என் கையைப் பிடித்துக் கொண்டு என்னை வழிநடத்திச் சென்றார்.

அவர் தான் ஜி.கே. விஷ்ணு. ஒரு நாயகனை எப்படி சிறப்பாகவும், மாஸாகவும் திரையில் காட்டுவது என்பது அவருக்கு தெரியும். ’வலிமை’ படத்தின் அப்டேட்டிற்குப் பிறகு, ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டை தான் ரசிகர்கள் அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள், தாக்குதல்களையும் எதிர்கொண்டவர் எஸ்.ஆர்.பிரபு தான்.

ரசிகர்கள் அவரைத் தான் குறிவைக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகள் பயணம் மிகவும் சவாலாக இருந்தது. ஆனால், எனக்கு தயாரிப்பாளர்கள் துணையாக இருந்தனர். பல எதிர்பாராத நிகழ்வுகளும் நடந்தன. அவர்கள் இப்படத்தில் பல கோடிகளை முதலீடு செய்து, தேவையான அனைத்தையும் வழங்கினார்கள். நானும் இப்படத்துக்காக 100% அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன். தயாரிப்பாளர்களுடன் பல முறை சண்டையிட்டுள்ளேன். ஆனால், இப்போது நாங்கள் இணக்கமான சூழலில் தான் இருக்கிறோம். ‘கருப்பு’ படத்தின் மூலம் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்திருக்கிறது.

’கருப்பு’ படத்தின் கதைக்காக 32 மாதங்கள் செலவழித்துள்ளேன். இவை அனைத்துமே சூர்யா சார் என்ற ஒரு மனிதரால் மட்டுமே சாத்தியமானது. அவரிடம் 45 நிமிடங்கள் மட்டுமே கதை சொன்னேன். அவர் உடனடியாக ஒப்புக் கொண்டார். சூர்யா சார் உன் படத்துல நடிக்கிறாரா என்று என் மனைவியே ஆச்சரியப்பட்டுப் போனார். திரையில் சூர்யா சாருடைய நடிப்பை முழுமையாக ரசித்து, கலகப்பாக, மாஸ் ஹீரோவாக காட்சிப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டேன். வழக்கமாக நாயகனை மையப்படுத்திய படங்களில், நாயகன் அனைத்து காட்சிகளிலும் இடம்பெறுவார்.

ஆனால், ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள், கதையோட்டங்கள் உள்ளன. ஆனால், அவர் அதற்கு முழுமனதுடன் ஒப்புக் கொண்டு நடித்துள்ளார். திரையில் அவருடைய கண்கள் மட்டுமே பல விஷயங்களைப் பேசுகின்றன. இப்படத்தின் முதல் பாதி முழுக்க கமர்ஷியலாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. இறுதியாக ஒரு மன்னர் தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்” என்று பேசியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

சூர்யா தனது சிம்மாசனத்தை திரும்பப் பெற வருகிறார்: ஆர்.ஜே.பாலாஜி உற்சாகம்
‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்: சூர்யா பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in