‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்: சூர்யா பேச்சு

‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்: சூர்யா பேச்சு
Updated on
1 min read

‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன் என்று இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியுள்ளார்.

‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் த்ரிஷா தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை நேரலையில் சாய் அபயங்கர் தனது குழுவினருடன் பாடினார். இந்த விழாவில் பின்பு படக்குழுவினர் அனைவருமே ‘கருப்பு’ படம் குறித்து பேசினார்கள்.

இறுதியாக சூர்யா பேசும்போது, “எனக்கு மதுரை எப்போதுமே ஸ்பெஷல். சாப்பாடு, அரசியல், பெண் தெய்வம் என பெரும் மரியாதை வைத்துள்ளேன். இந்த மதுரை மண்ணுக்கு நான் கடன்பட்டுள்ளேன். இங்கு நிறைய படம் பண்ணியிருக்கேன். 28 ஆண்டுகளாக என்னை ஒரு நாயகனாக ஆக்கியதற்கு, இந்த அன்பும், பாசம் உள்ளிட்டவை மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவுக்கு 5 லட்சம் பேர் வருவார்கள். அந்த மாதிரி இந்த ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழாவினை இன்னொரு சித்திரை திருவிழாவாக பார்க்கிறேன்.

இப்படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ் மிகவும் திறமையானர். அவர் பல்வேறு வகையான படங்களில் நடித்து வருகிறார். அவர் மிகவும் ஊக்கமளிப்பவர். நான்காம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் தற்போது ஏழாம் வகுப்பு தேர்வை முடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிபுக்கு எல்லையே இல்லை. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மிகவும் திறமைசாலி. உங்கள் முன்னால் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது. நான் அவரை முதலில் பார்த்த போது, அவர் ஒரு நாளைக்கு 1000 டியூன்களை உருவாக்குகிறார் என்றார்கள். இந்தப் படம் திரைக்கு வரும் போது, இசை வகையில் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.

’கருப்பு’ படம் இவ்வளவு தூரம் வருவதற்கு கருப்புசாமி கடவுள் தான் காரணம் என நினைக்கிறேன். கடவுள் ஒருவருக்குள் வரும்போது ஏற்படும் விளைவை உண்மையில் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும்.

ஒரு படம் வந்ததால், ஆர்.ஜே.பாலாஜி அப்படிச் சொன்னார், இப்படி சொன்னார் என்பார்கள். ஆனால், அவர் உண்மையில் பன்முகத் திறமைசாலி. நான் என்னை சூர்யாவாக பார்க்கிறேன்.

ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இப்படி நடிக்க வைத்ததற்கு என் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படம் பார்த்தவர்கள் முதல் பாதி ரொம்ப எமோஷனலாக இருக்கிறது, இரண்டாம் பாதி திரையரங்கில் கொண்டாடும் தருணங்கள் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மே 14-ம் தேதி இப்படம் உங்கள் கையில் தான் இருக்கும். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்” என்று பேசினார் சூர்யா.

‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன்: சூர்யா பேச்சு
ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தம்: தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in