புதுச்சேரி பஞ்சாலையில் ரஜினியின் ‘லால் சலாம்’ படப்பிடிப்பு - ரசிகர்கள் ஆர்வம்
புதுச்சேரி: புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படபிடிப்பு இன்று நடைபெற்றது.
தனுஷ் நடித்த '3', கவுதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே திருவண்ணாமலை, மும்பை போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை வளாகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் மேக்கப் போட்டுக்கொண்டு ரசிகர்களை பார்த்து கையசைத்து செல்லும் வீடியோ மற்றும் மேக்கப் போட்டுக்கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அறிந்த பொதுமக்கள், ரசிர்கள் சிலரும் நடிகர் ரஜினிகாந்தை பார்க்க பஞ்சாலை முன்பு கூடி நின்றனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ரஜினி மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் மட்டும் படபிடிப்பின்போது அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகின்ற 17-ம் தேதி வரை புதுச்சேரி துத்திப்பட்டு மைதானம், கோரிமேடு காவலர் மைதானம், லாஸ்பேட்டை மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.
