Published : 02 May 2023 08:45 AM
Last Updated : 02 May 2023 08:45 AM

‘இராவண கோட்ட’த்தில் கருவை மர அரசியல் - சாந்தனு பாக்யராஜ் பேட்டி

'இராவண கோட்டம்' படத்தில் சாந்தனு பாக்யராஜ்

விக்ரம் சுகுமாரனின் ‘இராவண கோட்டம்’ படத்தில் ஆளே மாறியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். ரத்தமும் சதையுமான ஒரு வாழ்வைக் காட்டும் டிரெய்லரில், ‘சாந்தனுவா இது?’ என உற்றுப் பார்க்கத் தோன்றுகிறது. மொத்தமாக, தன்னை இராமநாதபுரத்து இளைஞனாக மாற்றியிருக்கிற அவர், இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார். படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அந்த நம்பிக்கையை அளிக்கின்றன. வரும் 12-ம் தேதி வெளியாகும் படம் பற்றி பேசினோம் அவரிடம்.

‘இராவண கோட்டம்’ எதைப் பேசும் படம்?

இதுல கருவை மர அரசியல் பேசியிருக்கோம். தூவல் கலவரத்துல இருந்து ஒரு பகுதியை இன்ஸ்பிரேஷனா எடுத்து படம் உருவாகி இருந்தாலும், காதல் மைய கருவாஇருக்கும். அதைச் சுற்றி நடக்கிற விஷயங்கள், அதைப்பயன்படுத்தி நடக்கிற பிரச்சினைகள் தான் படம். டைரக்டர்விக்ரம் சுகுமாரனோட படமா, தரமான சினிமாவா இருக்கும்னு நம்பிக்கையோட சொல்வேன். ஒரு நல்ல படம் பார்த்தோம்ங்கற எண்ணத்தை ‘இராவண கோட்டம்’ கொடுக்கும்.

படத்துக்காக, கிராமத்து இளைஞனா மாறியிருக்கீங்களே?

உண்மைதான். இதுல சாந்தனுவை நீங்க பார்க்க முடியாது. செங்குட்டுவன் அப்படிங்கற கேரக்டராகத்தான் இருப்பேன். ஒரு கதாபாத்திரமா முழுசா மாறினேன்னு நான் நம்புற படம் இது. என் உடல் மொழி, தோற்றம், பேச்சுவழக்கு, நடை, உடைன்னு எல்லாத்தையும் இயக்குநர் சுத்தமா மாத்தியிருக்கார். தென்மாவட்ட கிராமத்துக்காரனா மாறியிருக்கேன். இது எனக்கு பெரிய அனுபவம். அதுக்காக இயக்குநருக்கு நன்றி சொல்லணும்.

மாட்டை பிடிச்சுட்டு வர்ற மாதிரியான புகைப்படங்கள் மிரட்டுதே...

நான் முழுக்க சிட்டியில வளர்ந்த பையன். எனக்கு மாடு பிடிக்கிறது பத்தி தெரியாது. பிடிச்சதே இல்லை. இந்தப்படத்தோட முதல் ஷெட்யூல்லயே அதை ஷூட் பண்ணணும்னு சொல்லிட்டாங்க. கால்ல செருப்பில்லாம நடக்கிறது, முள்ளுக்காட்டுக்குள்ள போறதுன்னு அப்பதான் கிராமத்து இளைஞனா மாற என்னை தயார்படுத்திட்டு இருந்தேன். திடீர்னு மாட்டைப் பிடிச்சுட்டு போங்கன்னு சொன்னதும் எனக்கு திக்குன்னு ஆயிடுச்சு. சரின்னு தயக்கத்தோட மாட்டைப் பிடிச்சேன். பின்னால நின்ன மாடு ஒன்னு, நான் பிடிச்சிருக்கிற மாட்டை திடீர்னு விரட்ட, அது வேகமாஓட ஆரம்பிடுச்சு. நானும் அது கூடவே வேகமா ஓடினேன். கிட்டத்தட்ட அதுதான் என்னை இழுத்துட்டு ஓடுச்சு. அப்படிஅமைஞ்சதுதான் அந்தக் காட்சி. இதே போல பல புதிய அனுபவங்களை இந்தப் படம் எனக்கு தந்திருக்கு.

தயாரிப்பாளர் கண்ணன் ரவி, உங்களுக்காகத்தான் இதைத் தயாரிச்சிருக்கிறதா சொல்லியிருக்கார்...

என் அப்பா எனக்கு என்ன பண்ணணும்னு நினைப்பாரோ, அதை அவர் பண்ணிட்டிருக்கார். எல்லாருமே மார்க்கெட்ல இருக்கிறவங்களை வச்சுதான் படம் பண்ணணும்னு நினைப்பாங்க. ஆனா, அவர் அதை பிரேக் பண்ணியிருக்கார். ‘உங்களுக்கு எல்லா திறமையும் இருக்கு.ஆனா, ஏதோ ஒன்னு மிஸ் ஆகுது. அதனால, உங்களை தூக்கி நிறுத்தற மாதிரி ஒரு படம் தயாரிக்கிறேன்’னு அவரா வந்தார். அப்பாவின் நண்பர். பட்ஜெட் பத்தி கவலைப்படாம இதை தயாரிச்சிருக்கார். அவருக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

உங்க ஜோடியா ஆனந்தி நடிச்சிருக்காங்க...

அவங்க ஒரு படத்தை தேர்வு பண்றாங்கன்னா, அதுல அவங்களுக்கு நல்ல கதாபாத்திரம் இருக்கும். இல்லைனா, நல்ல கதை இருக்கும். ‘பரியேறும் பெருமாள்’ மாதிரி அவங்க நடிச்ச படங்களைப் பார்த்தாலே தெரியும். இந்தப் படத்துக்கு கேட்கும்போது, முதல்ல கால்ஷீட் இல்லைன்னு சொல்லிட்டாங்க. ‘கதை கேளுங்க, அப்புறமா முடிவு பண்ணுங்க’ன்னு சொன்னோம். கேட்டதுமே கண்டிப்பா நடிக்கிறேன்னு சொன்னாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல, ‘இந்தப் படம் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்’னு சொல்லிட்டே இருப்பாங்க. பிரபு சார், ‘டேய், ராமநாதபுரமா வேண்டாம்டா, வெயில் தாங்க முடியாது’ன்னு சொன்னார். ஆனா, வந்து நின்னு அதைத் தாங்கிக்கிட்டு நடிச்சார். அருள்தாஸ், சஞ்சய்னு படத்துல நடிச்ச எல்லாருமே கடுமையா உழைச்சிருக்காங்க.

‘சுப்பிரமணியபுரம்’ மாதிரி உங்களுக்கு வந்த நல்ல வாய்ப்புகளை மிஸ் பண்ணியிருக்கீங்க. அதுக்காக இப்ப வருத்தப்படறீங்களா?

கண்டிப்பா. அந்த வருத்தம் இருக்கத்தான் செய்யுது. ஆனா, என் தலையில என்ன எழுதியிருக்கோ அதுதானே நடக்கும். ஒரு கட்டத்துல அப்பா (பாக்யராஜ்) மேல தவறான குற்றச்சாட்டுகள் வந்துடுச்சு. அவர்தான் கதையைகேட்டு, வேண்டாம்னு சொல்லிட்டார்னு சொன்னாங்க. அதனால அவரே, ‘சரியோ தப்போ, நீ நடிக்கிற படத்துக்கு நீயே கதையை கேட்டுக்கோ’ன்னு ஆரம்ப ஸ்டேஜிலயே அந்தப் பொறுப்பை எங்கிட்ட கொடுத்திட்டார். என் வருத்தங்களை ‘இராவண கோட்டம்’ மாத்தும்னு நம்பறேன். எல்லா நடிகர்களும் என்ன உழைப்பை கொடுக்கிறாங்களோ, அதைதான் நானும் கொடுக்கிறேன். எனக்கான ஏக்கம், நல்ல கதையில, நல்ல இயக்குநரோட வேலை பார்க்கணும் அப்படிங்கறதுதான். அதுக்கு தயாரா இருக்கேன். இன்னைக்குஇருக்கிற எல்லா பெரிய நடிகர்களும் ஆரம்பத்துல போராடிதான் வந்திருக்காங்க. எனக்கும் அப்படியொரு இடம் காத்திருக்குன்னு கண்டிப்பா நம்பறேன்.

கே.பாக்யராஜ் படங்கள்ல, நீங்க நடிச்சு ரீமேக் பண்ணணும்னா எதை தேர்வு செய்வீங்க?

அப்பாவோட டைரக்‌ஷன்ல நடிக்கும் ஆசை இருக்கு. அதுக்கான நேரம் அமையும் போது பண்ணணும். அப்பா படங்கள்ல அவர் முதிர்ச்சியான கேரக்டர்கள்தான் பண்ணியிருக்கார். அதனால கொஞ்சம் வயசான பிறகு அவர் படங்களை ரீமேக் பண்ணலாம்னு நினைச்சேன். அப்படி நினைச்ச படங்கள்ல ஒன்னு, ‘இன்று போய் நாளை வா’.அதை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ன்னு எடுத்துட்டாங்க. அது இல்லாம ‘டார்லிங் டார்லிங்’ பண்ணலாம். ‘விடியும் வரை காத்திரு’ படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படம். அதுல அவர் கேரக்டர் வேற மாதிரி இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x