கரோனாவை கட்டுப்படுத்த அரசின் புதிய வழி: நீரவ் ஷா நக்கல் பதிவு

கரோனாவை கட்டுப்படுத்த அரசின் புதிய வழி: நீரவ் ஷா நக்கல் பதிவு
Updated on
1 min read

கரோனாவை கட்டுப்படுத்த அரசு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது என்று நீரவ்ஷா நக்கலாக பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுக்கவே ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து, இதர மாநிலங்களில் கரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தினமும் பெட்ரோல் - டீசல் விலை உயர்ந்து வருகிறது. இன்றைய (ஜூன் 25) நிலவரப்படி சென்னையில் டீசல் 77.29 ரூபாயும், பெட்ரோல் 83.18 ரூபாயும் விற்பனையானது. இது பொது மக்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது தொடர்பாக முன்னணி ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா தனது ட்விட்டர் பதிவில் "இந்திய அரசாங்கம் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எரிவாயுவின் விலையை அதிகம் ஏற்றிவிடலாம் அப்போதுதான் யாரும் அவர்கள் வீட்டை விட்டு எப்படியும் வெளியே வர முடியாது" என்று நக்கலாக பதிவிட்டுள்ளார்.

தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணிபுரிந்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in