ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வசதி:  இன்சூரன்ஸ் தேவை; ராதாரவி வேண்டுகோள்

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வசதி:  இன்சூரன்ஸ் தேவை; ராதாரவி வேண்டுகோள்
Updated on
1 min read

ஹாலிவுட் படங்கள் போல் படமெடுத்தால் மட்டும் போதாது. அதற்கு இணையாக வசதிகளும் செய்து தர வேண்டும் என்று டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிப்ரவர் 19-ம் தேதி இரவு ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். ஷங்கர், கமல், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இதனிடையே இறந்தவர்களுக்கு நேற்று (பிப்ரவரி 20) கமல் அஞ்சலி செலுத்துவிட்டு, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை அறிவித்தார். மேலும், லைகா நிறுவனமும் 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தற்போது பெப்சி அமைப்பில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தயாரிப்பு நிர்வாகியான சந்திரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார் ராதாரவி.

அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, "தயாரிப்பு உதவியாளர்கள் யூனியனை இன்று பெயர் சொல்லும் அளவுக்கு வந்திருப்பதற்கு சந்திரனும் ஒரு முக்கியக் காரணம்.

அவர் பலாப்பழம் போன்றவர். கரடுமுரடானவர் என்றாலும் ரொம்பவே அன்பானவர். இந்த கிரேன் விபத்தில் இறந்தவர்களுக்குச் சகோதரர் கமல் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். அதற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எப்போதுமே தொழிலாளர் சம்மேளனத்துக்கு ஆதரவு தரக்கூடியவர்.

பெரிய படமாக எடுத்து, ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், ஹாலிவுட் படங்கள் மாதிரி வசதியும் செய்து தர வேண்டும். பெரிய படங்களை எடுக்கக் கூடிய தயாரிப்பாளர்கள், இன்சூரன்ஸ் செய்து கொடுத்தார்கள் என்றால் நன்றாக இருக்கும்” என்று பேசினார் ராதாரவி.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in