

வருமான வரி சோதனை முடிவு பெற்றதைத் தொடர்ந்து, 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி குறித்த படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் தொடங்கப்பட்டது.
அன்றைய தினமே, 'பிகில்' படத்தின் வரவு, செலவு கணக்கிற்காக விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இது தொடர்பான விசாரணைக்காக 'மாஸ்டர்' படப்பிடிப்புத் தளத்துக்கே வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றார்கள். விஜய்யிடம் விசாரணை நடத்திவிட்டு, மேலும் விசாரணைக்காக அவர்களுடைய காரிலேயே விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.
இதனால் பெரும் பரபரப்பு உண்டானது. மேலும், விஜய்யிடம் அவரது வீட்டில் வைத்தே ஒருநாள் முழுக்க விசாரணை நடத்தினார்கள். நேற்று (ஜனவரி 6) மாலை விஜய்யிடம் விசாரணை முடிந்தது. தங்களுடைய விசாரணைக்கு விஜய் முழு ஒத்துழைப்பு அளித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நெய்வேலி சுரங்கத்தில் அனுமதி வாங்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழல் 'மாஸ்டர்' படக்குழுவினருக்கு ஏற்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பில் விஜய்யும் இன்று கலந்துகொண்டார். இதில் விஜய் - விஜய் சேதுபதி இருவரும் மோதும் சண்டைக் காட்சியைப் படமாக்கி வருகிறது படக்குழு.
தவறவிடாதீர்