

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'ஜகஜால கில்லாடி'. இந்தப் படத்தின் படப்பணிகள் முடிவடைந்துவிட்டாலும், சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் விஷ்ணு விஷால்.
'எஃப்.ஐ.ஆர்' என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தின் பூஜை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தப் படத்தின் தலைப்புக்கு 'ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்' என்று அர்த்தம் எனப் படக்குழு குறிப்பிட்டது. சுஜாதா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருந்தது.
ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு பைனான்ஸ் கிடைக்காததால் எப்போது படப்பிடிப்பு என்பதில் குழப்பம் நீடித்தது. இறுதியில். இந்தப் படத்தை, விஷ்ணு விஷால் தயாரிக்க முன்வந்தார். இதனைத் தொடர்ந்து முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
சென்னையில் இன்று (நவம்பர் 24) முதல் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
கருணாகரன், 'யூடியூப்' பிரசாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்த் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.