Last Updated : 19 Aug, 2016 04:54 PM

 

Published : 19 Aug 2016 04:54 PM
Last Updated : 19 Aug 2016 04:54 PM

முதல் பார்வை: தர்மதுரை - எங்கே செல்லும் இந்தப் பாதை?

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான மூன்றாவது படம் 'தர்மதுரை'. மண் சார்ந்த கதைகளை சொல்லும் சீனு ராமசாமி 'தர்மதுரை'யில் என்ன சொல்கிறார்?

கிராமத்தில் சேவை செய்ய நினைக்கும் மருத்துவர் விஜய் சேதுபதி எப்போதும் போதையுடன் சலம்பித் திரிகிறார். அவர் குடும்பத்துக்கும் அவருக்கும் முரண்பாடுகள் முட்டி நிற்கின்றன. விஜய் சேதுபதி ஏன் அப்படி போதையில் சுற்றுகிறார்? அதற்கான காரணம் என்ன? படித்த படிப்புக்கு ஏற்ற தொழிலை தொடர்ந்தாரா? இயல்பு நிலைக்குத் திரும்பினாரா? என்பது மீதிக் கதை.

மருத்துவர்கள் கிராமத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்க முயற்சித்ததற்காக இயக்குநர் சீனு ராமசாமிக்கு பாராட்டுகள். அதே சமயம் அதற்கான எந்த வித நியாயத்தையும் கதை- திரைக்கதையில் செய்யாமல் வெறுமனே ஜம்ப் ஆகி, காட்சிகள் விரிவதுதான் மறுக்க முடியாத சோகம்.

விஜய் சேதுபதி 'தர்மதுரை' கதாபாத்திரத்தில் பக்காவாகப் பொருந்துகிறார். போதையில் அலப்பறை செய்வது, ஆங்கிலம் கலந்து பேசி கவர்வது, சாவு வீட்டில் குத்து டான்ஸ் ஆடுவது, காட்சிக்குத் தகுந்தாற்போல உணர்வுபூர்வமாக நடிப்பது என பின்னி எடுக்கிறார். ஒற்றைக் கதாபாத்திர பலத்துடன் படம் முழுக்க தாங்கி நிற்கிறது சேதுபதியின் நடிப்பு.

சிருஷ்டி டாங்கே சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில் ஈர்க்கிறார். தமன்னாவும், ஐஸ்வர்யா ராஜேஷூம் மனதில் நிற்கிறார்கள். வெடுக்கென கோபப்படும் சௌந்தர் ராஜா, சட்டையைப் பற்றி மட்டுமே சதா கவலைப்படும் இசக்கி ரகுராஜன் ஆகிய இருவரும் கதாபாத்திரத்துக்குரிய பங்களிப்பை சரியாக வழங்கியுள்ளனர்.

ராதிகா, கஞ்சா கருப்பு, அருள் தாஸ் ஆகிய மூவரும் டெம்ப்ளெட் கதாபாத்திரங்களாய் வந்து போகிறார்கள்.

மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கான தோரணை இல்லாமல், ஸ்கூல் வாத்தியார் தோரணையில் மட்டுமே ராஜேஷ் தென்படுகிறார்.

சுகுமாரின் ஒளிப்பதிவு வறண்ட பூமி, வயல்வெளி, மலைப்பகுதி, கிராமத்து வாசம் என அத்தனையும் அழகாக கடத்துகிறது. யுவன் இசையும், பின்னணியும் ரசனை. மக்கா கலங்குதப்பா பாடல் ரகளை.

'அழகுங்கிறது நிறத்துலயும், உருவத்துலயும் கிடையாது. செய்யுற செயல்ல இருக்கு' என சில இடங்களில் மட்டுமே சீனு ராமசாமியின் வசனம் கவனிக்க வைக்கிறது.

முந்தைய படங்களில் கதைசொல்லியாக கவனம் ஈர்த்த இயக்குநர் சீனு ராமசாமி, திருநங்கைக்கு வேலை கொடுப்பது, கிராமத்தில் மருத்துவர் வேலை செய்வது, பகை தீர்ந்து அன்பு பாராட்டுவது என பாசிட்டிவ் விஷயங்களைப் பதிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனால், திரைக்கதை உத்தியில் இயக்குநருக்கு ஏற்பட்ட குழப்பம் காட்சிகளில் தெரிகிறது. முதல் பாதி வரைக்கும் பார்வையாளர்களுக்கு கதை குறித்த தெளிவைத் தராதது, ஐஸ்வர்யா ராஜேஷின் முடிவு, சிருஷ்டிக்கு நடந்தது என்ன?, தமன்னாவின் அடுத்த கட்ட நகர்வு என எதற்கும் சரியான நியாயத்தை வழங்காமல் திரைக்கதை நகர்கிறது.

விஜய் சேதுபதி, சிருஷ்டியின் தந்தையுடன் பேசும் அந்த கலந்துரையாடல் எந்த உணர்வையும் தராமல் செயற்கையாகவே கடந்துபோகிறது. விஜய் சேதுபதி ஊரை விட்டுப் போன பிறகு, அவர் குடும்பம் படும் அவஸ்தைகளை படத்தில் உண்மையாகப் பதிவு செய்திருந்தால் படத்துக்கு இன்னொரு பரிமாணம் கிடைத்திருக்கும்.

இரண்டாம் பாதியில் ஏன் இவ்வளவு தொய்வு, சீனு ராமசாமி ஏன் சசிகுமார் பாணியில் ஒரு சினிமா எடுக்க முனைந்தார் என்ற கேள்விகள் மட்டும் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் துரத்திக் கொண்டே இருந்தன.

மொத்தத்தில் 'தர்மதுரை' எங்கே செல்லும் இந்தப் பாதை? என கேட்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x