Published : 18 Jun 2016 04:32 PM
Last Updated : 18 Jun 2016 04:32 PM
தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது தயாரிப்பு படத்தின் பணிகள் குறித்து சுந்தர்.சி பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
வெங்கட் ராகவன் இயக்கத்தில் சுந்தர்.சி, பூனம் பாஜ்வா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'முத்தின கத்திரிக்கா'. சுந்தர்.சி தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்க இருக்கிறார் சுந்தர்.சி. இப்படத்தின் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அப்படத்தின் கதைக்களம், தயாரிப்பு செலவு உள்ளிட்ட பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார் சுந்தர்.சி. அதில் "நடிகர்கள் குறித்து இன்னும் எதுவுமே முடிவாகவில்லை. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படத்தை இயக்குகிறேன். இந்திய அளவில் பெரும் பொருட்செலவில் அப்படம் தயாராகிறது என்று சொல்லலாம். அது ஒரு சரித்திரக் கதை. சாபுசிரில் கலை இயக்குநராகவும், கமலக் கண்ணன் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநராகவும் பணியாற்ற உள்ளனர்.
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோரோடு இப்படத்தில் பணியாற்ற இருப்பதில் சந்தோஷம். முழுமையான கதை முடித்துவிட்டு, கிட்டதட்ட 8 மாதங்கள் பணியாற்றியுள்ளோம். மேலும், இப்படம் முடிவடைய 2 வருடங்களாகும். மற்ற படங்களைப் போல் கதை முடிவானவுடன் படப்பிடிப்புக்கு சென்றுவிட முடியாது. STORY BOARD, GRAPHICS PLANNING உள்ளிட்ட பல விஷயங்கள் இக்கதையில் உள்ளடக்கி இருக்கிறது.
பல கதைகளின் தயாரிப்பு செலவில் நடிகர்களின் சம்பளம் பெரும் தொகையாக இருக்கும். ஆனால் இக்கதை தயாரிப்பு செலவே மிகவும் பெரியது. கண்டிப்பாக இந்திய அளவில் பெரும் பொருட்செலவாக இருக்கும்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக இருப்பதால் அனைத்து மொழி நடிகர்களுடனும் பேசி வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் அனைத்தும் முடிவாகிவிடும்.
அமெரிக்கா, டென்மார்க், இங்கிலாந்து, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளோம்" என்று சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT