Published : 23 Jun 2019 02:49 PM
Last Updated : 23 Jun 2019 02:49 PM
நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ரஜினி சாருக்கே பெருமை தான் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல், தண்ணீர்த் தொட்டி அமைத்தல், தண்ணீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் மக்களுக்கு இலவச குடிநீர் விநியோகம் என்று ரஜினி மக்கள் மன்றம் பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகிறது.
கடந்த வாரம் நங்கநல்லூர் பண்ணாச்சி அம்மன் கோயில் குளத்தை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சீரமைத்தனர். இன்று சிட்லபாக்கம் ஏரியைத் தூர் வாரும் பணியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆகியோர் சிட்லபாக்கம் ஏரியை இன்று தூர் வாரினர். இதனைக் கேள்விப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு இன்று நேரில் வந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை வாழ்த்தினார்.
இது குறித்து நடிகர் விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''தாய்ப்பால் போல் சுத்த அரசியல் செய்யும் நல்லகண்ணு ஐயாவே வந்து வாழ்த்தியது, ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ரஜினி சாருக்கே பெருமை தான்!! வாழ்க உங்கள் சமூகத் தொண்டு!!'' என்று விவேக் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT