Published : 07 Jun 2019 03:20 PM
Last Updated : 07 Jun 2019 03:20 PM
‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன் என சூர்யா தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மே 31-ம் தேதி வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், பொன்வண்ணன், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று (மே 7), இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது ‘என்.ஜி.கே’.
இந்நிலையில், “ ‘என்.ஜி.கே.’ திரைப்படம் குறித்த அத்தனைக் கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்டக் கதையம்சத்தையும், நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. #கத்துக்கறேன்தலைவரே” என ட்வீட் செய்துள்ளார் சூர்யா.
முன்னதாக, “ ‘என்.ஜி.கே.’ படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” என செல்வராகவன் ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT