Published : 01 Jun 2019 10:54 AM
Last Updated : 01 Jun 2019 10:54 AM
நேற்று (மே 31) வெளியாகியுள்ள ‘என்.ஜி.கே.’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘என்.ஜி.கே’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றிக் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ கதாபாத்திரத்தில் நிறைய ரகசியங்கள் மறைந்துள்ளன என ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.
“ ‘என்.ஜி.கே.’ படத்துக்கான பெரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. நீங்கள் காட்டியுள்ள அன்பு, அற்புதமானது. உங்களில் சிலர் யூகித்ததைப் போல், ‘என்.ஜி.கே’ கதாபாத்திரத்தில் நிறைய அடுக்குகள், ரகசியங்கள் மறைந்துள்ளன. படத்தை உன்னிப்பாகப் பார்க்கும்போது அவற்றை எளிதில் கண்டுகொள்ளலாம். குடும்பம் மற்றும் நண்பர்களோடு படத்தை ரசியுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.
‘என்.ஜி.கே.’ படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. ஆகஸ்ட் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT